/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம்வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம்
வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம்
வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம்
வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம்
ADDED : பிப் 25, 2024 04:26 AM

புதுச்சேரி : வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் விமர்சையாக கொண்டாடப்படும். தீர்த்தவாரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கோவில்களில் இருந்து உற்சவர்கள் எழுந்தருள்வர்.
அதன்படி, நேற்று முன்தினம் மாலை முதல் செஞ்சி ரங்கநாதர், மயிலம் முருகன், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், திண்டிவனம் சீனிவாச பெருமாள், மேல்மலையனுார் அங்காளபரமேஸ்வரி உட்பட பல்வேறு கோவில்களின் உற்சவர்கள், புதுச்சேரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்று காலை உற்சவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, வைத்திக்குப்பம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். மேலும், புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர், கவுசிக பாலசுப்ரமணியர், முல்லை நகர் உலக நாயகி அம்மன், காலாப்பட்டு பாலமுருகன், பிள்ளைச்சாவடி கமல சாய்பாபா, கோவிந்த சாலை முடக்கு மாரியம்மன், காசுக்கடை சுந்தர விநாயகர், வெண்ணிலா நகர் தேசமுத்து மாரியம்மன், கென்னடி நகர் அரசடி புற்று மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்தும் உற்சவர்கள் கடற்கரையில் எழுந்தருளினர்.
தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைத்திக்குப்பம் கடற்கரையில் தரிசனம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கடலில் பக்தர்கள் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. போலீசார் மைக் மூலம், கடலில் குளிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். கடற்கரையோரத்தில், லைப் ஜாக்கெட்டுடன் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். பக்தர்களுக்கு, பல்வேறு அமைப்புகள் சார்பில், நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.