ADDED : மே 01, 2026 03:16 AM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அருகே லாரி டிரைவரை கொலை செய்து குளத்தில் வீசிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் ஊனத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 37; லாரி டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள், 29. இவர்களுக்கு வைஷ்ணவி 4, ரோகித் 2, என, ஒரு மகள், மகன் உள்ளனர். செல்வம் கடந்த 28ம் தேதி, புதுச்சேரி மாநிலம், பண்டசோழநல்லுார் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெயிண்ட் கம்பெனிக்கு லாரியில் மூலப்பொருட்கள் ஏற்றி வந்தார்.
லாரியை கம்பெனியில் நிறுத்தி விட்டு, அன்று இரவு மது அருந்தி விட்டு கம்பெனிக்கு வந்தார். அப்போது கம்பெனி செக்யூரிட்டி மது குடித்து விட்டு கம்பெனிக்குள் வரக்கூடாது என கூறினார். இதனால், மது போதையில் இருந்த செல்வம், வெளியே சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கம்பெனி எதிரில் உள்ள குளத்தில் செல்வம் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்த செல்வத்தின், முகம், தாடை, கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரத்தகாயங்கள் இருந்ததால், போலீசார் சந்தேகத்தின் பேரில், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். அதில் செல்வம் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கம்பெனியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். அதில் டிரைவர் செல்வத்தை, மூன்று வாலிபர்கள் தாக்கியது பதிவாகி இருந்தது. அதையடுத்து அந்த வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வாலிபர்கள் பண்டசோழநல்லுார், சூரியன்பேட்டை தெருவைச் சேர்ந்த ஆதித்தியன், 24; பண்டசோழநல்லுார், சப்தகிரி நகரைச் சேர்ந்த ஹரீஷ், 19; கல்மண்டபம் பகுதியை சேர்ந்த சூர்யா, 24, ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் குளத்து மேட்டு பகுதியில் மது குடித்து கொண்டிருந்தபோது அங்கு சென்ற டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த மூவரும் செல்வத்தை தாக்கியுள்ளனர். இதில் செல்வம் இறந்ததால் அவரை மூவரும் சேர்ந்து குளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.
