/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம் புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
ADDED : செப் 01, 2025 03:46 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள், கிரேன் மூலம் கடலில், விஜர்சனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில், 5 அடி முதல் 21 அடி வரை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சாரம் அவ்வை திடலில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை வைத்து,சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, முதற் கட்டமாக, கிராம பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் கடந்த 29ம் தேதி, காலாப்பட்டு, நல்லவாடு, காரைக்கால் ஆகிய கடற்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன.
தொடர்ந்து, 2ம் கட்டமாக, நகரப் பகுதியில், வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் விஜர்சனம் ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.
முன்னதாக, சாரம், முத்தியால்பேட்டை, சாமிபிள்ளைத்தோட்டம், லாஸ்பேட்டை, பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சாரம் அவ்வை திடலுக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்டன.
அங்கு, சிலைகளுக்குசிறப்பு பூஜை செய்யப்பட்டு, மேளதாளத்துடன், ஊர்வலமாக சென்றன.
காமராஜர் வீதி, நேரு வீதி, காந்தி வீதி, எஸ்.வி.,பட்டேல் சாலை வழியாக கடற்கரை சாலையில் வந்தடைந்தது. தொடர்ந்து, சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி தலைமை செயலகம் எதிரேநடந்தது. கடற்கரையில், தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு, 3 கிரேன் மூலம், ஒவ்வொன்றாக, 500க்கும் மேற்பட்ட சிலைகள்கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
மதியம் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, காமராஜர் சாலை ராஜா தியேட்டர் வரை வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டது.
அதே போல, சிலைகள் ஊர்வலம் செல்லும் சாலையில் வாகனங்கள் தடை செய்யப்பட்டது.
ஊர்வலம் சென்ற காமராஜர், சாலை, நேரு வீதி, காந்தி வீதி, எஸ்.வி., பட்டேல் சாலையில் இருந்த மதுக்கடைகள், மது பானங்கள் விற்கும் ஹோட்டல்கள்மூடப்பட்டிருந்தது.
இந்த பகுதியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
அரியாங்குப்பம் : தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம், ஆண்டியார்பாளையம், பூரணாங்குப்பம் உள்ளிட்ட பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று கடலுார் சாலை, தவளக்குப்பம், பூரணாங்குப்பம் வழியாக ஊர்வலமாக சென்று, புதுக்குப்பம் கடற்கரைக்கு வந்தன.
அங்கு,12 க்கும் மேற்பட்ட சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டு சிலைகள் கடலில், விஜர்சனம் செய்யப்பட்டது.
மேலும், கடலுார் சாலை, நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில், வீடுகளில் வழிபாடு செய்யப்பட்டவிநாயகர் சிலைகளை, பொதுமக்கள் எடுத்து வந்து, ஆற்றில் விட்டனர்.