/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அலையாத்தி காடுகளின் பரப்பளவை அதிகரிக்க முடிவு 11,500 மரக்கன்றுகள் தயார் அலையாத்தி காடுகளின் பரப்பளவை அதிகரிக்க முடிவு 11,500 மரக்கன்றுகள் தயார்
அலையாத்தி காடுகளின் பரப்பளவை அதிகரிக்க முடிவு 11,500 மரக்கன்றுகள் தயார்
அலையாத்தி காடுகளின் பரப்பளவை அதிகரிக்க முடிவு 11,500 மரக்கன்றுகள் தயார்
அலையாத்தி காடுகளின் பரப்பளவை அதிகரிக்க முடிவு 11,500 மரக்கன்றுகள் தயார்
ADDED : ஜூன் 28, 2025 11:50 PM

புதுச்சேரி தேங்காய்திட்டு ஆற்று கழிவு முகப்பகுதியில் அலையாத்தி எனும் சதுப்பு நில காடுகளை உருவாக்கி வனத் துறை பராமரித்து வருகிறது. இங்குள்ள அவிசீனியா சதுப்பு நிலத்தாவரங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் முகாமிடுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
சதுப்பு நிலக்காடுகளில் உள்ள சுள்ளி, குச்சிகளை எடுத்து வந்து மரங்களில் கூடு கட்டி வருகின்றன. முட்டையிட்டு குஞ்சு பொறித்த பின் அந்த பறவைகளுக்கு இங்கேயே பறக்க கற்றுக்கொடுத்து அக்டோபர் மாதம் இறுதியில் சொந்த நாட்டிற்கு பறந்து செல்கின்றன.
இரு பக்கம் அடர்ந்து வளர்ந்துள்ள அலையாத்தி காடுகள் வழியாக ரம்மியமாக படகு பயணம் செய்வது தனி அனுபவம். இதற்காகவே சுற்றுலா பயணிகள் புதுச்சேரியின் மாங்குரோவ் காடுகளில் குவிந்து வருகின்றனர்.
சிதம்பரம் பிச்சாவரம் அலையாத்தி காடுகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியும் வளர்ந்துள்ள சூழ்நிலையில், அலையாத்தி காடுகளின் பரப்பளவை மேலும் அதிகரிக்க புதுச்சேரி வனத் துறை தற்போது திட்டமிட்டுள்ளது.
இதற்காக 11,500 ரைசோபோரா சதுப்பு நில மரக்கன்றுகள் நாற்றுகளாக உற்பத்தி செய்துள்ளது. விரைவில் சதுப்பு நில பரப்பளவை அதிகரிக்க இவை தேங்காய்திட்டு துறைமுக பகுதிகளில் பதிக்கப்பட்டது.
வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரி மாநிலம் மொத்தம் 490 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இதில், புதுச்சேரி பிராந்தியம் -294, காரைக்கால்-157, மாகி-9, ஏனாம்-30 சதுரகிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளன.
கடந்த 1988ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய வனக் கொள்கையின்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதம் காடு இருக்க வேண்டும். இந்த இலக்கின்படி, புதுச்சேரியில் 161.7 சதுர கிலோ மீட்டர் பசுமை போர்வை இருக்க வேண்டும்.
ஆனால் வேகமாக நகரமாகி வரும் புதுச்சேரியில் தற்போது 52.41 சதுரகிலோ மீட்டர் பரப்பளவிற்கு மட்டுமே காடு, மரங்கள் உள்ளது. அதாவது 10.69 சதவீதத்திற்கு மட்டுமே காடு, மரங்கள் உள்ளது. செயற்கை கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட ஆய்வு புகைப்படங்களும் புதுச்சேரியில் காடு, மரங்களின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய அவசிய தேவையை உணர்த்தி உள்ளன.
எனவே, தேசிய வனக் கொள்கையின்படி 33 சதவீதம் இலக்கை படிப்படியாக எட்டுவதற்காக இவை பெரிய உதவியாக இருக்கும்' என்றனர்.