ஓட்டு எண்ணும் மையங்கள் தயார் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
ஓட்டு எண்ணும் மையங்கள் தயார் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
ADDED : மே 03, 2026 05:24 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. நாளை (4ம் தேதி) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. முதலில் காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, 8:30 மணிக்கு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெறும்.
லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய மூன்று மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
மாகேவில் ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி, ஏனாம் எஸ்.ஆர்.கே., அரசு கலை கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது.
ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப் பட்டுள்ளது.
ஓட்டு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள வளாகங்களில் மத்திய பாதுக்காப்பு படை மற்றும் மாநில காவல் துறை காவலர்கள் அடங்கிய மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டர் வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நாளன்று தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ள அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்கள் மற்றும் ஓட்டு எண்ணும் முகவர்கள் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் ஓட்டு எண்ணும் முகவர்கள் ஓட்டு எண்ணும் அறைக்குள் மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதியில்லை.
ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்றிற்கு பிறகு பொது மக்களின் தகவலுக்காக இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





