Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருத்திய பட்ஜெட்டிற்க்கு மத்திய அரசு... அனுமதி; ரூ.270 கோடி கூடுதலாக கிடைக்கும்

திருத்திய பட்ஜெட்டிற்க்கு மத்திய அரசு... அனுமதி; ரூ.270 கோடி கூடுதலாக கிடைக்கும்

திருத்திய பட்ஜெட்டிற்க்கு மத்திய அரசு... அனுமதி; ரூ.270 கோடி கூடுதலாக கிடைக்கும்

திருத்திய பட்ஜெட்டிற்க்கு மத்திய அரசு... அனுமதி; ரூ.270 கோடி கூடுதலாக கிடைக்கும்

ADDED : ஜன 30, 2024 06:00 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : திருத்திய பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி அரசின் பட்ஜெட்டினை விட 270 கோடி ரூபாய்கூடுதலாக அளிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்திய அரசியல மைப்பு சட்ட பிரிவு 112-ன் படி அரசு ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆண்டு பட்ஜெட் (வரவு செலவு நிதிநிலை அறிக்கையை) கவர்னரின் ஒப்பு தல் பெற்று சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும்.

பொதுவாக மாநிலங்களில் பட்ஜெட் கேபினட்டில் தீர்மானம் செய்த பிறகு அதனை சட்டசபை யில் முன் வைத்து விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் புதுச்சேரி அரசால் தயாரிக்கக்கூடிய பட்ஜெட் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகே சமர்பிக்கப்படுகிறது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் யூனியன் பிரதேச வரவு செலவு திட்டத்தினை ஆய்வு செய்து வரவு செலவின் ஆண்டு விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் வரவு செலவு அறிக்கை மாற்றியமைத்து பின்னர் அனுமதி அளிக்கிறது.

புதுச்சேரி அரசின் 15-வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்தாண்டு மார்ச் 9-ம் தேதி கவர்னர் தமிழிசை உரையுடன் துவங்கியது.நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-வர் ரங்கசாமி, 11,600 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில், மாநில அரசின் வருவாய், கடன், செலவினம், மத்திய அரசின் நிதியளிப்பு உள்ளிட்டவைகளை கணக்கிட்டு தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியபடி அனைத்து துறைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகளுக்கு செலவும் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் இது உத்தேச பட்ஜெட் தான். உண்மையான பட்ஜெட் என்பது எதிர்பார்க்கப்படும் மாநில வருவாயை பொறுத்தே அமையும்.

எதிர்பாராத செலவு, எதிர்பார்க்கப்படும் வருவாய் குறைவு, திட்ட செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் பட்ஜெட் மதிப்பீட்டிற்கும், துறைகளின் நடைமுறை செலவினத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும். இதனை, நிதியாண்டின் இறுதியில் அரசு திருத்திய பட்ஜெட் மேற்கொண்டு நிதி நிலைமை சரி செய்யப்படுகிறது.

இதன்படி அனைத்து அரசு துறைகளிடமிருந்து நிதி செலவினம்,நிதி இருப்புகளை பெற்ற புதுச்சேரி அரசு அன்மையில் திருத்திய பட்ஜெட்டினை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது.

அந்த திருத்திய மதிப்பீட்டிற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அத்துடன் புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்த 11,600 கோடி அனுமதியுடன், 270 கோடி ரூபாய் கூடுதலாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் மூலம் ஓரளவு நிதி பிரச்னையை புதுச் சேரி அரசு சமாளிக்க உள்ளது. இருப்பினும் இந்த நிதி இன்னும் மத்திய அரசிடமிருந்து புதுச்சேரி அரசின் கைக்கு வந்து சேரவில்லை. திருத்திய பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மத்திய அரசு அளிக்கும் கூடுதல் நிதி கிடைத்ததும், நிதி அதிகம் உள்ள துறைகளிடமிருந்து, நிதி தேவைப்படும் பிற துறை திட்டங்களுக்கு பகிரப்பட உள்ளது.

அதன் பிறகு இரண்டு மாதத்திற்குள் இத்தொகையை அரசு துறைகள் முழுமையாக செலவு செய்து, திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

இது தொடர்பாகவும் அனைத்து துறைகளுக்கும் விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us