Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் கொடூர கொலை வழக்கில் 'பகீர்' தகவல் வெளியாகியுள்ளது

வாலிபர் கொடூர கொலை வழக்கில் 'பகீர்' தகவல் வெளியாகியுள்ளது

வாலிபர் கொடூர கொலை வழக்கில் 'பகீர்' தகவல் வெளியாகியுள்ளது

வாலிபர் கொடூர கொலை வழக்கில் 'பகீர்' தகவல் வெளியாகியுள்ளது

ADDED : ஜூன் 22, 2025 01:55 AM


Google News
திருக்கனுார் அடுத்த கொடாத்துார், மணவெளியில் கடந்த 15ம் தேதி இரவு பைக்கில் வந்த இருவர், போலீசை கண்டதும் பைக் மற்றும் மூட்டையை போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். சாக்கு மூட்டையில் வாலிபரின் வலது கை ரத்தம் சொட்டிய நிலையில் இருந்தது.

விசாரணையில், துண்டிக்கப்பட்ட கை, செல்லிப்பட்டை சேர்ந்த ஆதிநாராயணன், 33; என்பதும், அவரை கண்டமங்கலம் அடுத்த எஸ்.ஆண்டிப்பாளையம் தட்சணாமூர்த்தி,20; பிடாரிப்பட்டு, வடக்குப்பாளையம் ரோஹித்,20; ஆகியோர் கொலை செய்ததும் தெரிய வந்தது.

அதன்பேரில், இருவரையும் கைது செய்த போலீசார், பைக்கில் உட்கார்ந்ததால், ஆதிநாராயணனை கொலை செய்ததாக கூறினர்.

ஆனால், கொலை செய்யப்பட்ட ஆதிநாராயணன் முகம் கொடூரமாக வெட்டி சிதைக்கப்பட்டிருந்தது. மேலும், அவரது மார்பில், 20க்கும் மேற்பட்ட கத்தி குத்து இருந்தது. கை துண்டாக வெட்டி எடுத்து செல்லப்பட்டிருந்தது பெரும் சந்தேககங்களை எழுப்பியது.

இக்கொலை வழக்கில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுச்சேரி, தமிழக எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமியை காதலித்த, வாலிபர் ஒருவர், அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அதனை பார்த்த மற்றொரு வாலிபர், அந்த சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியின் காதலன் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த, சிறுமியின் காதலன், தனது காதலியை பலாத்காரம் செய்த நபரை கொலை செய்வதற்காக, தனது நண்பரான ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தியிடம் கூறியுள்ளார்.

அதன்பேரில், தட்சணாமூர்த்தி, வடக்குப்பாளையம் ரோஹித் இருவரும் குடித்துவிட்டு, கஞ்சா புகைத்துவிட்டு, சிறுமியை பலாத்காரம் செய்த நபரை கொலை செய்வதற்காக கடந்த 15ம் தேதி இரவு பெரியபாபுசமுத்திரம் சாலையில் பைக்கை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். .

அப்போது, குடிபோதையில் அங்கு வந்த ஆதிநாராயணன், அங்கு நின்ற பைக்கில் உட்கார்ந்துள்ளார். அதனை இருவரும் கண்டிக்கவே ஏற்பட்ட தகராறில், கஞ்சா போதையில் இருந்த இருவரும் ஆதிநாராயணனை கொடூரமாக வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கு தமிழக போலீசுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் விசாரணையை துவங்கினால் மட்டுமே உண்மை சம்பவம் வெளிவரும் எனத் தெரிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us