ADDED : ஜூலை 15, 2024 02:16 AM
திருக்கனுார்: திருக்கனுார் பகுதியில் வெளியேறும் கழிவுநீரை ஏரியில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
திருக்கனுார் பஜார் வீதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வணிகர் வீதி வழியாக 'ப' வடிவ கழிவநீர் வாய்க்கால் மூலம் மண்ணாடிப்பட்டு செல்லும் சாலை சிவன் கோவில் எதிரே உள்ள குளத்தில் சென்று சேர்கிறது. அங்கிருந்து இரண்டு நீர் மோட்டார்கள் உதவியுடன் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது.
இரண்டு மோட்டார்களில் ஒன்று நேற்று பழுதடைந்தது. இதனால், குளத்தில் சேரும் கழிவுநீரை வெளியேற முடியாமல், கழிவுநீர் மீண்டும் குடியிருப்புகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, கழிவுநீர் குளத்திற்கு செல்வதற்கு முன், கழிவுநீர் வாய்க்காலில் இருந்து நேரடியாக திருக்கனுார் சின்ன ஏரிக்கு மதகு வழியாக விடுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் கழிவுநீரை ஏரியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, கழிவுநீரை ஏரியில் விடும் முயற்சியை கைவிட்ட அதிகாரிகள், மாற்று மோட்டார் மூலம் குளத்தில் இருந்து கழிவுநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.