Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் புதிதாக 7 நீதிமன்றங்கள் திறப்பு தலைமை நீதிபதி, முதல்வர், கவர்னர் பங்கேற்பு 

புதுச்சேரியில் புதிதாக 7 நீதிமன்றங்கள் திறப்பு தலைமை நீதிபதி, முதல்வர், கவர்னர் பங்கேற்பு 

புதுச்சேரியில் புதிதாக 7 நீதிமன்றங்கள் திறப்பு தலைமை நீதிபதி, முதல்வர், கவர்னர் பங்கேற்பு 

புதுச்சேரியில் புதிதாக 7 நீதிமன்றங்கள் திறப்பு தலைமை நீதிபதி, முதல்வர், கவர்னர் பங்கேற்பு 

ADDED : ஜூலை 14, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், புதிதாக ஏழு நீதிமன்றங்கள் திறக்கப்பட்டது.

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம், நடமாடும் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் 5, 6 மற்றும் 7, கூடுதல் மாவட்ட தலைமை நீதிமன்றம் எண் 3, ஆகிய ஏழு நீதிமன்றங்கள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன.

அதன் துவக்க விழா நேற்று நடந்தது. புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன் வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) மகாதேவன் தலைமை தாங்கி, புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சரவணன், கோவிந்தராஜன் திலகவதி, கலைமதி, சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் சரத் சவுக்கான், சட்டத்துறை அரசு செயலர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை செயலர் ஜெயந்த குமார் ரே, அரசு செயலர் நெடுஞ்செழியன், கலெக்டர் குலோத்துங்கன், தலைமை மாஜிஸ்ரேட் பாலகிருஷ்ணன், புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், 'ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏழு புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்ற புதுச்சேரியை சேர்ந்த நீதிபதிகளுக்கு, பொறுப்பு தர வேண்டும் என்ற எண்ணத் தோடு இந்த நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பது அனைவரது எண்ணம். வழக்குகள் தேங்கி கிடக்கிறது என்ற நிலை மாற வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பு. அதனால் விரைவான நீதி மக்கள் எதிர்பார்ப்பில் ஒன்று. புதுச்சேரி பொறுத்தவரை நீதிமன்றங்களுக்கு தேவையான வசதிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கேட்பதற்கு ஏற்ப அரசு செய்து கொடுத்து வருகிறது.

மக்கள் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படும் அரசு இது. அதுபோல் மக்கள் எண்ணும் எண்ணத்திற்கு ஏற்ப நீதி வழங்குதல் விரைவாக இருக்க வேண்டும் என்பது எண்ணம். அதற்கு ஏற்ப நீதிமன்ற வளாகத்தை விரிவுப்படுத்த நீங்கள் விரும்பினால், அதற்கான இடத்தை ஒதுக்கி கொடுத்து நீதிமன்ற வளாகம் விரிவுப்படுத்த உடனடியான நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள நீதிபதிகளுக்கு, சென்னை நீதிபதிகள் தங்களின் அனுபவத்தினை கொண்டு தேவையான அறிவுரைகள் வழங்க வேண்டும். கூடுதலான நீதிமன்றம், நீதிபதிகள் நியமிக்கப்படும் போது மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us