சீமான் - பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு: தந்தை, மகன் உறவு என நா.த.க., பதில்
சீமான் - பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு: தந்தை, மகன் உறவு என நா.த.க., பதில்
சீமான் - பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு: தந்தை, மகன் உறவு என நா.த.க., பதில்

சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், சந்தித்துப் பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில், நா.த.க., தனித்துப் போட்டியிடும் என, சீமான் தெரிவித்துள்ளார். அதேநேரம், தி.மு.க.,வை வீழ்த்த, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, நா.த.க.,வை கொண்டுவர, திரைமறைவில் பேச்சு நடந்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, சென்னையில் சீமான் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது, பா.ஜ.,வுடன் கூட்டணியில் இடம்பெறுவது அல்லது நா.த.க., தலைமையில் தனிக் கூட்டணி உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, நா.த.க.,வினர் கூறியதாவது: சீமான், பன்னீர்செல்வம் சந்திப்பு, வழக்கமான தந்தை, மகன் சந்திப்புதான். அவர்கள் அவ்வப்போது, சந்தித்துப் பேசுவர். இது வழக்கமான ஒன்று. நா.த.க.,வை தங்கள் கூட்டணிக்கு அழைத்துச் செல்ல, சில கட்சிகள் தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றன.
அந்த வகையில், பா.ஜ., இருக்கும் அ.தி.மு.க., கூட்டணியில், நாம் தமிழர் கட்சியை இணைக்க பேச்சு நடந்து வருகிறது. அதேநேரம், நாம் தமிழர் கட்சியும் தங்கள் தலைமையில் ஒரு அணி அமைக்கும் முடிவில் உள்ளது. அதில் பன்னீர்செல்வத்தை இணைக்க சீமான் முயன்று வருகிறார். அதற்காகவும் இருவரும் சந்தித்துப் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், சீமான் தனித்துத்தான் போட்டியிட வேண்டும் என, கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில்தான், கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.