'அதிகாரமும் நாற்காலிகளும் எங்களை தேடி வரும்'
'அதிகாரமும் நாற்காலிகளும் எங்களை தேடி வரும்'
'அதிகாரமும் நாற்காலிகளும் எங்களை தேடி வரும்'
ADDED : ஜூன் 16, 2025 01:51 AM

திருச்சி:: 'எங்களை நோக்கி அதிகாரம் வரும். பிரதமர் பதவியை கைப்பற்றுமாறு அம்பேத்கர் வழிகாட்டினார்' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில், 'மதசார்பின்மை காப்போம்' என்ற பெயரில் பேரணி நடந்தது.
அதை தொடர்ந்து, அவர் பேசியதாவது:
தமிழகத்தில், யார் எந்த கூட்டணி? என்று தேர்தல் கணக்குகளை பேசிக் கொண்டிருக்கின்றனர். நமக்கு அந்த கவலை இல்லை. தி.மு.க.,விடம் வி.சி., சிக்கித் தவிக்கிறது என சொல்கின்றனர்.
அரசியல் அறியாமையில் உளறும் அரைவேக்காடுகள் அவர்கள். தமிழக அரசியலின் வழியை தீர்மானிப்பது வி.சி., இந்திய அரசியலை கூர்மைப்படுத்துவதும் வி.சி., தான்.
வி.சி., வலிமையை தெரியாதவர்கள், திருமாவளவனுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை; பேரம் பேச தெரியவில்லை. துணை முதல்வர் பதவியை கேட்க மறுக்கிறார் என்றெல்லாம் சொல்கின்றனர்.
முதல்வர் பதவிக்கே நாங்கள் ஆசைப்படவில்லை. 'பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள்' என்று தான் அம்பேத்கர் வழிகாட்டி இருக்கிறார். அது தான் அதிகாரமுள்ள பதவி.
கடந்த 35 ஆண்டுகளாக நாங்களும் அரசியல் செய்கிறோம்; 10 ஆண்டுகளாக தேர்தல் அரசியல் வேண்டாம் என கூறி வருகிறோம். சம காலத்தில் எங்களோடு புறப்பட்டவர்கள், எங்கோ வழிதவறி போய் விட்டனர்.
ஆனால், வி.சி., மட்டும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகாவிலும் துளிர் விடுகிறது.
அனைத்து வரம்புகளையும் கடந்து நிமிர்ந்து நிற்கும் எங்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை. சமூகம், பொருளாதாரம், கலை உலகம் என பட்டியல் இன மக்கள், தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம், வி.சி., எழுச்சி தான்.
ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை என்று சொல்பவர்கள் நாங்கள் இல்லை; நாங்கள் அறிவு பரம்பரை. எங்களை நோக்கி அதிகாரம் வரும்; எங்களை நோக்கி நாற்காலிகள் வரும். இவ்வாறு அவர் பேசினார்.