'கிங் மேக்கர்'களாகும் நிதீஷ், சந்திரபாபு: வளைத்து போட காங்கிரஸ் முயற்சி?
'கிங் மேக்கர்'களாகும் நிதீஷ், சந்திரபாபு: வளைத்து போட காங்கிரஸ் முயற்சி?
'கிங் மேக்கர்'களாகும் நிதீஷ், சந்திரபாபு: வளைத்து போட காங்கிரஸ் முயற்சி?
UPDATED : ஜூன் 05, 2024 01:12 AM
ADDED : ஜூன் 05, 2024 12:04 AM

புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், நேற்று இரவு 9:00 மணி நிலவரப்படி இண்டியா கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்துள்ளன. பெரும்பான்மைக்கு மொத்தம் 272 இடங்கள் தேவை என்பதால், இண்டியா கூட்டணிக்கு 38 இடங்கள் குறைவாக உள்ளன.
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 291 இடங்களை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையானதை விட 19 இடங்கள் அதிகமாக உள்ளது. பா.ஜ., தனியாக 239 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 33 இடங்கள் குறைவாக உள்ளது.இந்த நேரத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக கூட்டணி மாறி ஆதரவு அளிக்கும் கட்சி தலைவர்கள், 'கிங் மேக்கர்' என்ற அந்தஸ்தை பெறுகின்றனர்.
இந்த முறை, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, தனியாக 16 இடங்களை வென்றுள்ளது. தே.ஜ., கூட்டணியுடன் சேர்த்து 21 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பீஹாரில், பா.ஜ.,வை விட குறைவான தொகுதியில் போட்டியிட்ட போதும், பா.ஜ.,வுக்கு இணையாக 12 இடங்களை ஐக்கிய ஜனதா தளம் கைப்பற்றி உள்ளது.
இந்த இரு கட்சிகளும் தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்தாலும், அவர்களையும், இன்னும் சில சுயேச்சைகளையும் இண்டியா கூட்டணி பக்கம் வளைத்துப்போட முயற்சிகள் நடப்பதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, செய்தியாளர்களிடம் நேற்று மாலை பேசியபோது, இது தொடர்பான சமிக்ஞையை வெளிப்படுத்தினார்.அவர் கூறியதாவது: எங்கள் கூட்டணி கட்சிகள் மற்றும் இண்டியா கூட்டணியில் புதிதாக இணைய உள்ள கட்சிகளுடன் எப்படி இணைந்து பணியாற்றுவது, பெரும்பான்மையை பெறுவது என்பது குறித்து பேச உள்ளோம். அதுவரை எதுவும் கூற இயலாது. இவ்வாறு கூறினார்.
வரும் நாட்களில், நிதீஷ், சந்திரபாபு மற்றும் சில சுயேச்சைகளை, தங்கள் பக்கம் இழுப்பதற்கான பேரத்தில் இண்டியா கூட்டணி ஈடுபடும் என்றே தெரிகிறது. ஆனாலும், தற்போதைய தொகுதி நிலவரத்தை கணக்கிடும் போது, இவர்கள் இருவரும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு அளித்தாலும், அந்த கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகள் கிடைக்காது என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.