
நீத்தோரும் நினைவிடமும் (கீழ்நமண்டி)
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியத்தில் உள்ளது கீழ்நமண்டி கிராமம். இங்கு, 55 ஏக்கர் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட, இரும்பு காலத்தை சேர்ந்த கல்வட்டங்கள் உள்ளன. கடந்த 2023--24ல் முதல்கட்ட அகழாய்வு நடந்தது. இரண்டாம் கட்ட அகழாய்வு 2024, ஜூனில் தொடங்கி, கடந்த மே மாதம், அகழாய்வு இயக்குநர் விக்டர் ஞானராஜ் தலைமையில் முடிந்தது.
ஈமப்பேழை
இந்தாண்டு, ஆறு கல்வட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.அதில், மூன்று ஈமப்பேழைகள் முழுமையாகவும், நான்கு ஈமப் பேழைகள் உடைந்த நிலையிலும் மீட்கப்பட்டன. அவை, ஆறு முதல் 12 கால்களுடன், செவ்வக வடிவில், கையால் வனையப்பட்டுள்ளன. அங்குள்ள கலையங்களில், 63க்கும் மேற்பட்ட கீறல் குறியீடுகள் கிடைத்துள்ளன.
சடங்கு இடம்
புதைப்பிட பகுதிக்கு அருகில், 60 - 70 செ.மீ., ஆழத்தில், மண்பாண்ட ஓடுகள், சமைத்து உண்ட விலங்குகளின் எலும்புகள், மிக மெல்லிய தரைப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.
வாழ்விடம்
புதைப்பிடம் தவிர, இங்கு, இரண்டு வாழ்விட பகுதிகளும் கண்டறியப்பட்டு உள்ளன.
தொழில் பகுதி
இங்கு, பல இடங்களில், இரும்பு உருக்கும் தளப்பகுதிகள் கண்டறியப்பட்டு, நான்கு குழிகள் தோண்டப்பட்டன. அங்கு, இரும்பு உருக்குவதற்கான சுடுமண் காற்றுக்குழாய்களும், இரும்பை பிரித்தபின் கழிக்கப்பட்ட இரும்பு கசடுகளும் கிடைத்துள்ளன. இங்குள்ள மலைப்பகுதியில், புதிய கற்கால மனிதர்கள் கற்கோடரிகளை தீட்டிய பள்ளங்களும், கற்கருவி, செதில்களும்கிடைத்துள்ளன.
தொன்மை
கடந்தாண்டின் கரிமப் பொருட்களை காலக்கணிப்பு செய்தததில், 3,692 ஆண்டுகள் என, தெரியவந்துள்ளது. தற்போதும், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகளும், கரிமப்படிவங்களும் சேகரிக்கப்பட்டு, காலக்கணிப்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை தவிர, பானை ஓடுகளில் கிடைத்துள்ள குறியீடுகள், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்பதால், அவற்றுக்கும் எழுத்து முறை உருவாக்கத்துக்குமான தொடர்புகள் பற்றிய தனித்த ஆய்வுகளும் நடக்கின்றன.