Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/இழிவாக பேசுவது அறிவான செயலா?: மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கு ஆதினங்கள் கண்டனம்

இழிவாக பேசுவது அறிவான செயலா?: மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கு ஆதினங்கள் கண்டனம்

இழிவாக பேசுவது அறிவான செயலா?: மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கு ஆதினங்கள் கண்டனம்

இழிவாக பேசுவது அறிவான செயலா?: மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கு ஆதினங்கள் கண்டனம்

ADDED : ஜூலை 05, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
மதுரை: லோக்சபாவில் பேசிய மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன், 'செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்தில் எத்தனை நுாறு பெண்களை அடிமையாக வைத்திருந்தான் தெரியுமா. அந்தச் செங்கோலை இந்த அவையில் வைத்திருப்பதன் மூலம், இந்த நாட்டு பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்' என்று ஆவேசமாக பேசினார். மன்னர்கள் ஆண்ட பாரம்பரிய பெருமை மிக்க தமிழகத்தைச் சேர்ந்த, அதுவும் மீனாட்சி செங்கோல் பெற்று ஆட்சி புரியும் மதுரையின் எம்.பி., அந்த மன்னர்களையே அவமதிப்பதா எனஆதினங்களும், ஆன்மிகவாதிகளும்கொதித்து போயுள்ளனர்.

யாருக்காகவோ பேசியிருக்கிறார்


- மதுரை ஆதினம்

மன்னர்கள் அனைவரையும் தவறாக வெங்கடேசன் பேசியுள்ளார். அப்படியானால் பாரி, மருதுபாண்டியர், வீரபாண்டிய கட்டபொம்மன், செத்தும் கொடுத்த சீதக்காதி, அதியமான், பாண்டியர், திருமலை நாயக்கர் மன்னர்கள் எல்லாம் மோசமானவர்களா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., இப்படி பேசுவது முறையல்ல. அவரை பின்னாலிருந்து இயக்குவது யார் எனத்தெரியவில்லை. யாருக்காகவோ பேசியிருக்கிறார். மன்னர்கள் குறித்த வரலாற்று நுாலை எழுதியவர் இப்படி பேசியது வருந்ததக்கது.

பூம்புகார் படத்தில் கணவனை கொன்ற பாண்டிய மன்னனை பார்த்து கண்ணகி, 'உனக்கு எதுக்கு செங்கோல்' என கேட்டாள். 'தவறு இழைத்துவிட்டேன். என் செங்கோல் வளைந்துவிட்டது' என மன்னர் கூறினார். அந்த வசனங்களை எழுதியது முதல்வர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி. இனியாவது வெங்கடேசன் கவனமாக பேச வேண்டும்.

குறுகிய எண்ணம் கொண்ட எம்.பி.,


- சாந்தலிங்க மருதாச்சல அடிகள், பேரூர் ஆதினம்

நேரு பிரதமராக பொறுப்பேற்றபோது திருவாவடுதுறையில் இருந்து ராஜாஜியின் ஏற்பாட்டில் அவருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. அதன் அருமை தெரியாதவர்கள் அதனை அருங்காட்சியகத்தில் வைத்துவிட்டனர். அதற்கு மீண்டும் மரியாதை செய்ய பிரதமர் மோடி 20க்கும் மேற்பட்ட ஆதினங்களை அழைத்து விழா நடத்தி பார்லிமென்டில் சேர்த்தது, தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. அதுபற்றி குறுகிய எண்ணத்துடன் மதுரை எம்.பி.வெங்கடேசன் குறிப்பிட்டு இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

நேரு இறைநம்பிக்கை இல்லாதவர் என்றாலும், அவர் செங்கோலுக்கும், ஆதினத்திற்கும் பெருமை சேர்த்து வாங்கியதை வரலாறு சொல்கிறது. அந்த வரலாறு தெரியாமல் அதை இழிவாக பேசுகிறோம். திருக்குறளை எடுத்துக் கொண்டால் அதில் செங்கோன்மை என்ற அதிகாரமே உள்ளது. அது செம்மையான ஆட்சி முறையை சொல்வது.

அந்த செங்கோல் பார்லிமென்டில் இருப்பது தமிழகத்திற்கு பெருமை. இறை நம்பிக்கை இல்லாதவர்கள்தான் கேரளாவிலும் ஆட்சி செய்கின்றனர். ஆனால் அவர்கள் சங்கரரைப் பற்றி தவறாக எதுவும் சொல்வதில்லை. ஏனெனில் அவர் மண்ணின் மைந்தர் என்பதற்காக அதை மதித்து போற்றுகின்றனர்.

திருக்குறளை படிக்க வேண்டும்


- குமரகுருபர சுவாமிகள், சிரவை ஆதினம்

நம் சமயம், செங்கோல், பசுவின் சிறப்பு பற்றி தொடர்ந்து பலர் அவமானமாக பேசுவது தமிழருக்கெல்லாம் வருத்தத்தை அளித்துள்ளது. மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு லோக்சபா சென்றவர் வெங்கடேசன். இந்த மதுரையில்தான் நீதி தவறியபோது நீதிவளைந்தது என்பதற்காக மன்னன் உயிரை மாய்த்தது அனைவரும் அறிந்தது. புதிய எம்.பி.,க்கள் பதவி ஏற்கும்போது உ.பி.,யில் இருந்தவர்தான் அந்த செங்கோலை எடுக்க வேண்டும் என பேசினார்.

அதனை அம்மாநில முதல்வர் கடுமையாக கண்டித்தார். அதுபோல நம்முடைய எம்.பி., பேசியது வருந்தத்தக்கது. அவர் முழுமையாக திருக்குறளை படிக்கவில்லை என்று தெரிகிறது. உலகின் பொதுமறை திருக்குறளில் செங்கோன்மை அதிகாரத்தில் வள்ளுவர்,

''வேலன்று வெற்றி தருவது மன்னனதுகோலதுாஉம் கோடா தெனின்'

என்று சொல்கிறார்.

ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது வேலல்ல. நேர்மை தவறாது ஆட்சி செய்வதுதான் சிறப்பு என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறார். இதுபோன்ற அறிவுசார் நுால்களை கற்றால் இதுபோல தவறான கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல மாட்டார்கள். அவ்வகையில் வெங்கடேசன் பேசியது வருத்தத்திற்குரியது. எதிர்காலத்தில் இப்படி பேசுபவர்களுக்கு நம் மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.

எம்.பி., பேசுவது தவறு


- சாது சண்முக அடிகள், பழநி ஆதினம்

புனிதமான ஒரு செயலை அறியாமையால், அதன் நன்மை புரியாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., தவறாக பேசுவது வருத்தத்திற்குரியது.

'உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்' என்றும்,

'சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்'

என்று பயனில்லாத சொற்களைவிட பயனுள்ள சொற்களை பேசி அவர்களை சார்ந்தோர் நன்மை பெற வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி,

'நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய் சொல்'

என்றும் அவர் கூறுவார். மேலும்

'நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைகுலத்தின்கண் ஐயப் படும்'

என்றும் சொல்வார்.

அதாவது உலகமே புகழக்கூடிய நற்செயலை தவறாக சொல்வது என்றால், அவர்கள் நல்ல குலத்தில் பிறந்தவர்களா என்று சந்தேகப்பட வைக்கும் என்கிறார் வள்ளுவர். எனவே நாம் இழிவான செயலை செய்யாமல், மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் இருக்க வேண்டும். அவருக்கு எல்லோரும் ஒருங்கிணைந்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us