விளம்பரங்களுக்கு முக்கியத்துவம்: அடையாளம் இழக்கும் அரசு பஸ்கள்
விளம்பரங்களுக்கு முக்கியத்துவம்: அடையாளம் இழக்கும் அரசு பஸ்கள்
விளம்பரங்களுக்கு முக்கியத்துவம்: அடையாளம் இழக்கும் அரசு பஸ்கள்
ADDED : ஜூன் 14, 2024 06:39 AM

பல்லடம் : அரசு போக்குவரத்து கழகம் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், அரசு பஸ்கள் தங்கள் அடையாளத்தை இழந்து வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், 8 கோட்டம் வாயிலாக 21 ஆயிரம் பஸ்களை இயக்கி வருகிறது. 1.20 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
சமீப காலமாக, அரசு போக்குவரத்து கழகம், வருவாயை பெருக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இதன்படி, பஸ்களில் விளம்பரம் செய்தல், பார்சல் புக்கிங், விரைவு பஸ்கள் வசதி, சுற்றுலா செல்ல சிறப்பு பஸ்கள் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பஸ்களின் பின்புறம் விளம்பரம் செய்யப்பட்டு வந்த நிலையில், நாளடைவில் இது விரிவடைந்து, தற்போது ஒட்டுமொத்தமாக பஸ் முழுவதும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதனால், இவை அரசு பஸ்களா, தனியார் பஸ்களா என்ற கேள்வி எழுகிறது.
கிராம மக்கள் பலர், பஸ் நிறம், எண்கள் ஆகியவற்றையே அடையாளம் கொண்டு பஸ் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திடீரென, இதுபோல் பஸ்கள் அடையாளமே தெரியாத வகையில் விளம்பரங்களாக மாறியிருப்பது, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஓட்டை ஒடிசல் பஸ்களாலும், சேவை குறைபாடுகளாலும் போக்குவரத்து கழகம் சிக்கித் தவித்து வரும் நிலையில், இதுபோல் விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது மக்கள் மத்தியில் வெறுப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.