துாய்மை பணியாளர் எலும்பை முறித்த தி.மு.க., வட்ட செயலர் விஜயன் கைது
துாய்மை பணியாளர் எலும்பை முறித்த தி.மு.க., வட்ட செயலர் விஜயன் கைது
துாய்மை பணியாளர் எலும்பை முறித்த தி.மு.க., வட்ட செயலர் விஜயன் கைது
ADDED : ஜூன் 11, 2025 09:19 AM

சென்னை: தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில், குப்பை சேகரிக்கும் பணியில், ஆந்திராவை சேர்ந்த காசராஜ், 42, என்பவர் ஈடுபட்டு வருகிறார். ஜூன், 8 மாலை 4:00 மணிக்கு, லோடு ஆட்டோவில் குப்பை ஏற்றிச் சென்ற அவர், கன்னடப்பாளையம் கிடங்கில் கொட்டிவிட்டு திரும்பினார்.
அப்போது, தாம்பரம் மாநகராட்சி, 52வது வட்ட தி.மு.க., செயலர் விஜயன், 44, மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் சேர்ந்து, 'பல்லாவரம் குப்பையை எதற்காக எங்கள் பகுதியில் கொட்டுகிறாய்' எனக்கேட்டு, இரும்பு பைப் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
இதில், காயமடைந்த காசராஜை, சக பணியாளர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, 'சிடி' ஸ்கேன் எடுத்து பார்த்ததில், காசராஜியின் இடது தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, கே.கே., நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம், இருவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான தி.மு.க., வட்ட செயலர் விஜயனை, நேற்று கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.