சுதந்திரமாக பணிபுரிய முடியவில்லை... மனக்குமுறலை கொட்டித் தீர்க்கும் போலீஸ்
சுதந்திரமாக பணிபுரிய முடியவில்லை... மனக்குமுறலை கொட்டித் தீர்க்கும் போலீஸ்
சுதந்திரமாக பணிபுரிய முடியவில்லை... மனக்குமுறலை கொட்டித் தீர்க்கும் போலீஸ்
ADDED : ஜூன் 25, 2024 06:05 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு அரசியல் பிரமுகர்கள் பக்கபலமாக இருப்பதால் சுதந்திரமாக பணிபுரிய முடியவில்லை என போலீசார் புலம்பி தவிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மட்டுமின்றி, கஞ்சா புழக்கம், ஏரி வண்டல் மண் மற்றும் ஆற்று மணல் கடத்தல், 24 மணி நேரமும் மது விற்பனை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. பெரும்பாலும், அரசியல் பிரமுகர்களின் பின்புலமாக இருப்பவர்கள் இது போன்ற குற்றசெயல்களில் ஈடுபடுகின்றனர்.
போலீசார், குற்ற செயலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் நிலையம் அழைத்துச் செல்கின்றனர். ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கு கூட பதியவிடாமல் குற்ற செயலில் ஈடுபடும் நபரை விடுவிக்க செய்கின்றனர்.
இதில், தங்களது பேச்சை கேட்க மறுக்கும் போலீசார் உள்ளிட்ட அரசு அலுவலர்களை மிரட்டுதல், பணியிட மாற்றம் செய்தல் போன்ற பழிவாங்கும் நடவடிக்கையை அரசியல் பிரமுகர்கள் மேற்கொள்கின்றனர். இதனால், சுதந்திரமாக பணிபுரிய முடியாமல், வேறுவழியின்றி அரசியல்வாதிகளின் கட்டளைக்கு கீழ்பணிந்து நடக்க வேண்டிய நிர்பந்தம் காவலர்களுக்கு உள்ளது. இது மட்டுமின்றி அனைத்து அரசு அலுவலகத்திலும் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது.
அவ்வாறு இருக்க அசம்பாவித நிகழ்வு ஏற்படும் போது, அரசு அதிகாரிகள் மட்டும் தண்டிக்கப்படுவது நியாயமற்ற செயல். எனவே, தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு, குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்களுக்கு துணையாக உள்ள அரசியல்வாதிகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றசம்பவங்கள் தடுக்கப்படும் என போலீசார் புலம்பி தவிக்கின்றனர்.
-நமது நிருபர்-