பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து; ஆதரவும் எதிர்ப்பும்
பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து; ஆதரவும் எதிர்ப்பும்
பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து; ஆதரவும் எதிர்ப்பும்

ஷர்மிளா தேவி, தொழில்முனைவோர்:
பட்ஜெட்டில் கல்வி மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இளம்தலைமுறையினரிடையே போதைப்பழக்கம் உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களை வழிநடத்த கவுன்சிலர்களை நியமிப்பதற்கு தனி பட்ஜெட் ஒதுக்கியிருக்கலாம். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான போதுமான அரசுப் பள்ளிகள் இல்லை. கண் தெரியாத, காதுகேளாத, நடக்க முடியாதவர்களுக்கு இன்னும் உதவ வேண்டும். பள்ளிகளில் வீல்சேர் வைத்தால் மட்டும் போதாது. மற்ற மாற்று திறனாளி மாணவர்களின் நலனுக்காக சிறு பட்ஜெட் ஒதுக்கியிருக்கலாம்.
ரகுநாதராஜா, தலைவர், கப்பலுார் தொழிலதிபர்கள் சங்கம்:
மதுரையில் புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு இடம் கிடைக்காமல் சிரமப்படும் நிலையில் புதிய தொழிற்பேட்டை அமைப்பதை வரவேற்கிறோம். ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்பேட்டைகளை பராமரிப்பதற்கு தனியாக உள் கட்டமைப்பு நிதி ஒதுக்கியிருக்கலாம். அதைத்தான் எதிர்பார்த்தோம். மதுரை கப்பலுார் உட்பட பல்வேறு தொழிற்பேட்டைகளில் ரோடே இன்றி மோசமாக உள்ளது.
நவாஸ் பாபு, தலைவர், மதுரை மஹியா தொழிற்பேட்டை:
தமிழகத்தில் பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு முன் பொருளாதார ஆய்வு நடத்தப்பட்டது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டலங்கள் பிரித்து சர்வே நடத்தியுள்ளனர்.
தீனதயாளன், பொருளாதார துறை பேராசிரியர்:
பெற்றோர் இல்லாத குழந்தைகளை பராமரிப்பதற்கு 18 வயது வரை மாதம் ரூ.2000 வழங்குவது கல்வியில் மறுமலர்ச்சியில் ஏற்படுத்தும் சமூகப்பார்வை. சுற்றுச்சூழலுக்கான நிதி ஒதுக்கீடு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைக்க ரூ.125 கோடி ஒதுக்கியது, அரசுப்பள்ளிகளுடன் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்காகவும் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம்.
நித்யாபாய், தனியார் நிறுவனம்:
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குறைந்த கட்டணத்தில் தோழியர் விடுதிகளை அரசே அமைப்பது என்பது வரப்பிரசாதம். இலவச பஸ் பயணம் போன்று பெண்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் தோழியர் விடுதி பாராட்டுக்குரியது. பெண்கள் பெயரில் ரூ. 10 லட்சம் வரை பதிவு செய்யப்படும் பத்திரப்பதிவுக்கான கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைவது என்பது பெண்கள் பேரில் சொத்துகள் வாங்குவதை ஊக்குவிக்கும். மகளிருக்கான உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் நிறைய நிராகரிக்கப்பட்டது. மீண்டும் விண்ணப்பிக்க அனுமதி கொடுப்பதாக சொல்வதும் நல்ல விஷயம்.
சுரேஷ் குமார், வர்த்தகர்:
தமிழகத்தில் 6 ஆயிரத்து 100 கி.மீ., துாரத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 200 கோடி தார் ரோடு அமைக்க நிதி ஒத்துக்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் அவரசர கதியில் தார் ரோடு அமைக்கப்பட்டது. ஏற்கனவே கடந்தாண்டு போடப்பட்ட பட்ஜெட்டின் பல திட்டங்கள் நிறைவேறாமல் உள்ளன. குறிப்பாக மதுரையில் 15 சதவீத ரோடு பணிகள் தான் முடிவடைந்துள்ளன. பல இடங்களில் ரோடுகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஏற்கனவே இருந்த திட்டம் முடியாத நிலையில் இந்த பட்ஜெட் அர்த்தமற்ற பட்ஜெட்.
-தினேஷ், தலைவர் சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம்:
ரூ.2.5 லட்சம் கோடி குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி, கலைஞர் கைவினைத் திட்டத்தில் ரூ.74 கோடி மானிய நிதி ஒதுக்கீட்டை வரவேற்கிறோம். நகரில் பஸ்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. புதிய பஸ்கள் குறிப்பாக மதுரைக்கு மட்டும் 100 மின்சார பஸ்கள் வழங்குவதற்கு நன்றி. 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவர். மதுரையில் அமைய உள்ள காலணி தொழிற்பூங்கா மூலம் தென்மாவட்ட மக்களுக்கு வேலை கிடைக்கும். குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு எந்த சலுகையும் வழங்காதது வருத்தம் அளிக்கிறது.
எஸ்.பிரியதர்ஷினி, ஐ.டி.,நிறுவன நிர்வாகி
: பெண்களுக்கு விலையில்லா பயணம் செய்ய ரூ.3600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். பெண்கள் பயணிக்கும் பஸ்கள் பழைய, சேதமடைந்த பஸ்களாக உள்ளன. அதற்கு பதிலாக புதியவை வாங்கி இருக்க நிதிஒதுக்கலாம். தோழியர் விடுதிகள் ஏற்கனவே 13 உள்ளது.
-எஸ்.பாஸ்கரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்:
தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து; பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக்கம் குறித்து எதுவும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு கோரிக்கையை இந்தாண்டே நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். அடுத்தாண்டுக்குரியதை அந்த ஆண்டில் கூற வேண்டியதுதானே.
ஆவலுடன் எதிர்பார்த்த பட்ஜெட் இல்லை
இயற்கை பேரிடரால் பாதிக்கும் கடலுார் மாவட்டத்தில் சென்னையை போல் மழை நீர் உறிஞ்சும் பூங்கா அமைக்கவும், மாவட்டத்தில் மணிமுக்தாறு, வெள்ளாறு, கெடிலம் ஆகியவற்றின் கரை மேம்பாட்டிற்கும், மென்பொருள் பூங்கா அமைக்கப்படும் என்ற முந்தைய அறிவிப்புக்கும் நிதி ஒதுக்கவில்லை. பண்ருட்டியில் முந்திரி பழச்சாறு உற்பத்தி தொழிற்சாலை, குறித்த அறிவிப்பு இல்லை. ஆவலுடன் எதிர்பார்த்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது.
- மருதவாணன், சிறப்பு தலைவர்,
அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, கடலுார்.