ராஜ்யசபா சபை முன்னவர்: நட்டாவுக்கு புதிய பதவி?
ராஜ்யசபா சபை முன்னவர்: நட்டாவுக்கு புதிய பதவி?
ராஜ்யசபா சபை முன்னவர்: நட்டாவுக்கு புதிய பதவி?
ADDED : ஜூன் 22, 2024 12:03 AM

பா.ஜ.,வின் தேசிய தலைவராக இருப்பவர் நட்டா. இவரது பதவிக் காலம் கடந்த ஜனவரியிலேயே முடிவுக்கு வந்தாலும் லோக்சபா தேர்தலுக்காக ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 30ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்கள் தீவிரமாக உள்ளன. இருப்பினும், புதிய தலைவர் தேர்வு தள்ளிப்போனால், நட்டாவுக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம்.
அடுத்த சில மாதங்களில் மஹாராஷ்டிரா, ஹரியானா, டில்லி, ஜார்க்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதுவரையில், இவர் தலைவர் பதவியில் நீடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றபோது, அதில் சுகாதாரத்துறை அமைச்சராக நட்டா பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தான், ராஜ்யசபாவில் பா.ஜ.,வின் சபை தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்ற ஆலோசனை நடந்து வருகிறது. இந்த பதவியில் இருப்பவர் தான், ராஜ்யசபாவின் சபை முன்னவர் என்று அழைக்கப்படுவார்.
இதுவரையில் அந்த பதவியில் அமைச்சர் பியுஷ் கோயல் இருந்து வந்தார். ராஜ்யசபா எம்.பி.,யாகவே தன் அரசியல் வாழ்நாள் முழுதும் இருந்துவிட்ட அவர், சமீபத்திய லோக்சபா தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டார்.
அதில் வெற்றி பெற்று லோக்சபா எம்.பி.,யாகவும் ஆகிவிட்டார். அவர் வகித்த சபை முன்னவர் பதவி, ஆளுங்கட்சியை ராஜ்யசபாவில் தலைமையேற்று நடத்தும் மிக முக்கியமான பதவி.
எதிர்க்கட்சிகளை சமாளித்து, ராஜ்யசபா தலைவருடன் இணைந்து நெருக்கடியான நேரங்களில் சபையை எந்த பிரச்னையுமின்றி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்புள்ள பதவி அது. அந்த பதவிக்குத்தான், தற்போது நட்டாவைக் கொண்டு வர பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் வெளியாகஉள்ளது.
- நமது டில்லி நிருபர் -