Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/சுற்றுலா தலங்கள் இல்லாத காஞ்சிபுரம்: புது திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்படுமா?

சுற்றுலா தலங்கள் இல்லாத காஞ்சிபுரம்: புது திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்படுமா?

சுற்றுலா தலங்கள் இல்லாத காஞ்சிபுரம்: புது திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்படுமா?

சுற்றுலா தலங்கள் இல்லாத காஞ்சிபுரம்: புது திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்படுமா?

UPDATED : ஜூன் 22, 2024 05:53 AMADDED : ஜூன் 21, 2024 09:38 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்துடன் செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம், திருப்போரூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் இருந்தபோது, 4,300 சதுர கி.மீ., கொண்ட பெரிய மாவட்டமாக இருந்தது. கடந்த 2019ல் மாவட்டம் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் தனியாக செயல்படத் துவங்கியது.

இதனால், பெரும்பாலான சுற்றுலா தலங்கள் செங்கல்பட்டு மாவட்டத்திலேயே இடம்பெற்று விட்டது.

வேடந்தாங்கல் மற்றும்கரிக்கிலி பறவைகள் சரணாலயம், மாமல்லபுரம், முட்டுக்காடு படகு குழாம், முதலியார் பண்ணை படகு குழாம், ஆம்பரக்கோட்டை, வடநெம்மேலி முதலை பண்ணை, வண்டலுார் உயிரியல் பூங்கா போன்ற அனைத்தும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன.

இந்த சுற்றுலா தலங்களுக்கு, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

ஆனால், மாவட்டம் பிரிந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் எவ்வித சுற்றுலா தலங்களும் இன்றி காணப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், தற்போது, 1,704 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளது.

மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில், பாரம்பரியமிக்க நுாற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன.

இந்திய அளவில் புகழ்பெற்ற காமாட்சியம்மன் கோவில், கைலாசநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் என, பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட கோவில்கள் உள்ளன.

ஆனால், அவை முழுதும் வழிபாட்டு தலங்களாக உள்ளன. அனைத்து தரப்பினரும் சென்று பொழுதுபோக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுலா இடங்கள் இல்லாதது, காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், உள்ளூரில் எவ்வித பொழுதுபோக்கு மையங்களும் இல்லாததால், வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களில் உள்ள பொழுதுபோக்கு இடங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக சுற்றுலா தலங்கள் ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், புதிய சுற்றுலா தலங்கள் அமைக்கும் நடவடிக்கையை சுற்றுலா துறை எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில், தமிழகசட்டசபை கூட்டத்தொடர் துவங்கி, மானியக் கோரிக்கை மீதான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. வரும் 26ம் தேதி, சுற்றுலா துறை மானிய கோரிக்கை அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுலா மையங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏரிகளில் படகு குழாம் அமைப்பது, அரசு சார்பில், 'தீம் பார்க்' அமைப்பது, கலைத்திருவிழா நடத்துவது போன்ற புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடையே நிலவுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us