Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ தானத்தில் சிறந்தது ரத்ததானம்; விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

தானத்தில் சிறந்தது ரத்ததானம்; விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

தானத்தில் சிறந்தது ரத்ததானம்; விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

தானத்தில் சிறந்தது ரத்ததானம்; விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

UPDATED : ஜூன் 15, 2024 04:01 AMADDED : ஜூன் 15, 2024 12:08 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ரத்தம் தானமாகப் பெறப்படும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மனித உடலில் இருக்கவேண்டிய ரத்தத்தின் சராசரி அளவு ஐந்து லிட்டராகும்.

இது குறையும்போதோ, ரத்த அணுக்களில் பிரச்னைகள் ஏற்படும்போதோ உடல் சீராகச் செயல்படுவதில் சிரமம் ஏற்படும். உடல் இயக்கத்தைச் சீராக்க ரத்தத்தின் தேவை அவசியம். அது தானமாகப் பெறப்பட்டு செலுத்தும்போது, எந்தவிதமான நோய்க் கிருமிகளும் இல்லாமல் இருக்க வேண்டும்.

சாலை விபத்து, ஆலை விபத்துகளில் சிக்குவோர், அறுவைசிகிச்சை செய்வோர், பிரசவத்தின்போது கர்ப்பிணிகள், கர்ப்பகாலங்களில் ரத்தசோகையுள்ளவர்கள் என ரத்தத்தின் தேவையுள்ளவர்கள் அதிகம்.

நேற்று உலக ரத்தக்கொடையாளர் தினம். உதிரம் கொடுப்பது உயிர் காக்கும் உன்னத சேவை என்பதை உணர்ந்து பல ஆண்டுகளாக பலரும் ரத்த தானம் செய்து வருகின்றனர். இதுதொடர்பான விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டும்.

முழுமையாக நீங்காத அச்சம்


திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, மருத்துவ அலுவலர் வித்யா கூறியதாவது:

பல இடங்களில் ரத்த தான முகாம் நடத்தப்படுகிறது; இளைஞர்களிடம் ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது.

இருப்பினும், ரத்த தானம் செய்தால், உடலில் ரத்தம் குறையும் என்ற அச்சம், மக்கள் மத்தியில் இனியும் இருக்கிறது; இது தவறு. ரத்த தானம் செய்தால், உடல் பருமன் ஏற்படும் என்பதும் தவறான நம்பிக்கை.

ரத்த தானம் செய்வோரின் ஹீமோகுளோபின் அளவு, ஆண்களுக்கு, 13; பெண்களுக்கு, 12 என்ற அளவில் இருக்க வேண்டும்.

ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்ய வருவோரிடம், தங்களுக்கு தெரிந்தவர்களிடம், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வலியுறுத்துகிறோம். கிராமங்களில் ரத்த தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு, சற்று அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

நன்றி சொல்லும் ஆண்டு


ஒருவரிடம் இருந்து, 350 மி.லி., ரத்தம் சேகரிக்கப்படுகிறது; அதை, 4 பேருக்கு பயன்படுத்தும் அளவுக்கு மருத்துவத்தின் முன்னேற்றம் வந்துள்ளது. 90 நாள் இடைவெளியில் ஒருவர் ரத்தம் வழங்கலாம். 18 முதல், 65 வயதுடைய, உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் ரத்தம் தானமாக வழங்கலாம்.

ஆண்டுதோறும், ஜூன் 14ம் தேதி, உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்து முன்வைக்கப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டுக்கான கருப்பொருளாக, '20 வருடங்களாக ரத்த தானம் கொடுத்தவர்களை கொண்டாடுவோம்; ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி சொல்வோம்' என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us