நெல் விளைச்சல் பாதிப்பால் கிலோ அரிசி ரூ.80 ஆக உயர்வு
நெல் விளைச்சல் பாதிப்பால் கிலோ அரிசி ரூ.80 ஆக உயர்வு
நெல் விளைச்சல் பாதிப்பால் கிலோ அரிசி ரூ.80 ஆக உயர்வு
ADDED : ஜூன் 11, 2024 03:50 AM

நெல் விளைச்சல் பாதிப்பால் ஒரு கிலோ அரிசி, 80 ரூபாயாக எகிறியுள்ள நிலையில், விலையை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக நெல் தேவையில், தஞ்சாவூர் மாவட்டம், 48 சதவீதம்; ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள், 19 சதவீதம் பூர்த்தி செய்கின்றன. மீதி, 37 சதவீதம் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. பருவநிலை மாற்றம், வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வறட்சியால் கடந்தாண்டு நெல் மகசூல் பாதிக்கப்பட்டு அரிசி விலை உயர்ந்தது.
குறிப்பாக, 'தமிழகத்தில் நெல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஜூனில் மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரவில்லை. பருவ மழையும் போதிய அளவு பெய்யாததால் குறுவைக்கு பயிரிடப்பட்டிருந்த, 2 லட்சம் ஏக்கர் பயிர் பாதிக்கப்பட்டு மகசூல் பாதியாக குறைந்தது' என, டெல்டா பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச்சில் கிலோ, 35க்கு விற்ற, ஏ.டி.டி., 45 ரகம், நடப்பாண்டு ஏப்ரலில், 42 ரூபாய், தற்போது, 49 ரூபாய் என படிப்படியாக விலை உயர்ந்தது. பி.பி.டி., ரகம் கிலோ, 46ல் இருந்து ஏப்ரலில், 60, தற்போது, 65 ரூபாய் என விற்பனையாகிறது.
வெள்ளை பொன்னி, 56ல் இருந்து ஏப்ரலில், 64, தற்போது, 75 ரூபாய்; பழைய பொன்னி, 64ல் இருந்து, 68, தற்போது, 75 முதல், 80 ரூபாய்; இட்லி அரிசி என்ற கிட்டாகார், 52ல் இருந்து, ஏப்ரலில், 56, தற்போது, 60 ரூபாய்; அம்பைகார் அரிசி, 45ல் இருந்து தற்போது, 52 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. 2 மாத இடைவெளியில் அரிசி கிலோவுக்கு, 5 முதல், 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில செயலர் எஸ்.பரணிதரன் கூறியதாவது:
கடந்தாண்டு பருவ மழை பாதிப்பால், 50 சதவீத அளவு நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து நெல், அரிசி விலை உயர்ந்துள்ளது. கடந்தாண்டில் கிலோ, 19 ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு ஏப்ரலில் ஒரு மூட்டை(77 கிலோ), 1,800 ரூபாய், கிலோ, 24 ரூபாயாக இருந்தது. தற்போது நெல் பற்றாக்குறை அதிகரித்து ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கொள்முதல் செய்வதால் முதல் ரக மூட்டை, 2,300 ரூபாய், இரண்டாம் ரகம், 1,600 ரூபாய் என, கொள்முதல் செய்கிறோம். முதல் ரக நெல் விலை கிலோ, 30 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினத்தில் மழையால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. நெல் விலை உயர்வால் அரிசியும் உயர்ந்துள்ளது. ஜூலையில் மேலும் உயர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில், 200 ஆலைகளில், 100 கிலோவாட் வரை, சோலார்(சூரிய சக்தி) மின்சாரம் தயாரித்து உபயோகப்படுத்தும் அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு சோலார் மின்சாரத்துக்கு, 'நெட்வொர்க் சார்ஜ்' என, வசூல் செய்யப்படுகிறது. சோலார் மின் திட்டத்தை ஊக்கப்படுத்த வேண்டிய தமிழக அரசு, இதுபோன்ற கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின் கட்டணத்தை குறைக்கக்கோரி, 2 ஆண்டுகளாக போராடியும் பலன் இல்லை. மேலும் அரிசி விலை உயர்ந்தால் தமிழக அரசுக்கு தான் கெட்டப்பெயர் ஏற்படும். மேலும் மின் கட்டணத்தை உயர்த்தாமல் அரிசி விலையை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.கே.சுப்ரமணியம் கூறியதாவது:
நெல் அரவை ஆலைகளில், 112 முதல், 150 கிலோவாட் அளவுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியின்போது கிலோவாட் மின்சாரத்துக்கு, 30 முதல், 35 ரூபாய் இருந்தபோது, 2,360 ரூபாய் கட்டணம் இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் ஒரு கிலோவாட் மின்சாரத்துக்கு, 650 ரூபாய் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 112 கிலோவாட் மின்சாரத்துக்கு, 72,800 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
நிலை கட்டணம் என அறிவித்துள்ளதால் ஆலை இயங்கவில்லை என்றாலும், 72,000 ரூபாய் கட்ட வேண்டும். தவிர யுனிட், 6.15 ரூபாயாக இருந்த நிலையில், 7.25 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறுவதால், அரிசி விலை மேலும் எகிறும். 25 கிலோவுக்கு கீழ் ஜி.எஸ்.டி., 5 சதவீதம் என்பதை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டணத்தில் நிலை கட்டணத்தை தவிர்த்து பயன்பாடு கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அரிசி மற்றும் மளிகை மொத்த வியாபாரி ஆர்.குருபிரசாத் கூறியதாவது:
மக்காச்சோள மூட்டை, 2,000 ரூபாய்க்கு விற்பதால் அதுபோன்ற மாற்று பயிர்களை, நெல் விவசாயிகள் சாகுபடி செய்வதால் தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. தவிர, 'ரியல் எஸ்டேட்' மூலம் ஏரி, ஆறு பாசன விளை நிலங்களும், வீட்டுமனை, தொழிற்சாலைகள் என அமைத்து வருவதால் பயிர் சாகுபடி குறைந்து வருகிறது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் பகுதிகளில் இருந்து அரிசி வாங்கி வந்து விற்கிறோம். வெள்ளை பொன்னி கிலோ, 80 ரூபாயாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அரிசி கிலோ, 'சதம்' அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -