ADDED : ஜூன் 30, 2024 12:48 AM

புதுடில்லி: வெளிநாட்டு அரசியலில், 'நிழல் பிரதமர்' என எதிர்க்கட்சி தலைவரை அக்கட்சியின் தொண்டர்கள் அழைப்பது வழக்கம். தற்போது, அந்த வழக்கம் நம் நாட்டிலும் தொற்றி விட்டது. ராகுல் தான் நிழல் பிரதமர் என, காங்., கட்சியினர் பேசத் துவங்கியுள்ளனர்.
லோக்சபா தேர்தலில், 99 தொகுதி களை கைப்பற்றியுள்ள காங்கிரஸ், ஏதோ ஆட்சியை பிடித்து விட்டது போலவே மகிழ்ச்சியில் உள்ளது.
அத்துடன், பார்லிமென்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சரியான போட்டி கொடுத்து, 'நீட்' உட்பட பல விஷயங்களில், மோடி அரசுக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்து விட்டது. 'நிழல் பிரதமர் என தன்னை அழைப்பது ராகுலுக்கு பிடித்துள்ளது; அவரும் சந்தோஷமாக உள்ளார்' என, காங்., கட்சி தலைவர்கள் கூறினாலும், கூட்டணிக்குள் இதற்கு எதிர்ப்பு உள்ளதாம்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, நிழல் பிரதமர் வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'இண்டியா' கூட்டணியில் இணையாமல், தன் மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியவர்.
'நம் கட்சியில் யாரும் ராகுலை நிழல் பிரதமர் என அழைக்கக் கூடாது' என, கட்டளையிட்டுள்ளாராம். இவரைப் போலவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், நிழல் பிரதமர் அடைமொழிக்கு எதிராக இருக்கிறாராம். ஆனால், இதைப் பற்றியெல்லாம் காங்கிரசோ, ராகுலோ கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.