
பிளாஷ்பேக்: எக்ஸ்பிரஸ் கவிஞர்
மெட்டை கேட்ட அடுத்த நிமிடமே பாடல் எழுதக்கூடியவர் என்று கவியரசர் கண்ணதாசனை சொல்வார்கள், அடுத்த நிமிடமே மெட்டுக்கு மூன்று விதமான பாடல் வரிகளை சொன்னவர் தஞ்சை ராமய்யா தாஸ். அவரை எம்ஜிஆர் "எக்ஸ்பிரஸ் கவிஞர்" என்று செல்லமாக அழைத்தார்.
அதேபோல நாடங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர்களை "வாத்தியார்" என்று அழைப்பது அக்கால வழக்கம். தஞ்சை ராமய்யா தாஸ் தான் மட்டும் கதை, திரைக்கதை, வசனம் எழுதாமல் மற்றவர்களுக்கும் அதுகுறித்த பயிற்சி அளித்தார். அதனால் அவர் "வாத்தியார்களின் வாத்தியார்" என்றும் அழைக்கப்பட்டார்.
தஞ்சை, மானம்பூச்சாவடியில் புனித பீட்டர் பள்ளியில் படித்து, கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்று தஞ்சை கீழவாசல் பள்ளியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் "சுதர்சன கான சபா" நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். பிறகு, "ஜெயலட்சுமி கான சபா" என்று தானே ஒரு நாடகக் குழுவை ஏற்படுத்தி, "மச்சரேகை, துருவன், கம்பர், விதியின் போக்கு, வள்ளி திருமணம், அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, பகடை பன்னிரண்டு" ஆகிய நாடகங்களை நடத்தி வந்தார்.
"ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" என்ற படத்தின் மூலம் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். "பாதாள பைரவி" படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். "மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கிக் கல்யாணம், மனிதன் மாறவில்லை" ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதினார்.
83 படங்களில் சுமார் 532 பாடல்களை எழுதியதோடு, 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதினார். அவர் நடத்திய நாடங்கள் பின்னாளில் திரைப்படங்களானது.1965ம் ஆண்டு காலமானார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!