Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தங்கவயலில் மாயமான தமிழ் பள்ளிகள்

தங்கவயலில் மாயமான தமிழ் பள்ளிகள்

தங்கவயலில் மாயமான தமிழ் பள்ளிகள்

தங்கவயலில் மாயமான தமிழ் பள்ளிகள்

UPDATED : நவ 13, 2024 12:00 AMADDED : நவ 13, 2024 04:48 PM


Google News
தங்கவயல்:
தமிழ் வாழ்ந்த, தமிழரை தரமான கல்வியறிவுடன் திகழ வைத்த, தங்கவயல் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களே இல்லாத நிலை காணப்படுகிறது.

கர்நாடகாவில் தமிழர்கள் நிறைந்த, குட்டித் தமிழகம் என்றெல்லாம் பேசப்பட்ட நகரம் கே.ஜி.எப்., எனும் கோலார் கோல்டு பீல்டு. இங்கு குடியிருப்புப் பகுதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிகள் இருந்தன.

இப்படி நுாற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளில், தமிழ் மொழியை தமிழர்கள் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், உருது, ராஜஸ்தானி ஆகிய மொழிகளை தாய் மொழியாகக் கொண்டவர்களும் முதல் மொழியாக தமிழில் படித்தனர். இது, தங்கவயலில் மறுக்கப்படாத உண்மை.

தமிழை எழுதப் படிக்க தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற பெருமை, தங்கவயலில் நிலவிய காலம் இருந்தது. நுாற்றுக்கும் அதிகமான தமிழ்ப் பள்ளிகள் இருந்த இடத்தில், தற்போது பள்ளிகள் இருக்கின்றனவா எனத்தேட வேண்டியுள்ளது.

முழுக்க முழுக்க தமிழரே நிறைந்திருந்த பல பகுதிகளில் தமிழ்ப் பள்ளியே இல்லை என்ற அவல நிலை, தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ளது.

சீதா தமிழ் அரசு ஆரம்பப் பள்ளி: தமிழ் ஆர்வலர்கள் நிறைந்த இடமான, என்.டி.பிளாக் பகுதியில் நுாற்றாண்டு பழமையான சீதா பள்ளி எனும் அரசு தமிழ் ஆரம்பப் பள்ளி இருந்தது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை நடத்தப்பட்டது. இப்பள்ளியில் தமிழை முதல் மொழியாக கொண்டு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.

இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் - ஆசிரியைகள் 10 பேர் இருந்தனர்.

தமிழில் படித்த பலர் மருத்துவர்கள், பொறியாளர்கள், உயர் அதிகாரிகளாக இருந்துள்ளனர். இத்தகைய தமிழ்ப் பள்ளியில், ஒரு மாணவர் கூட இல்லாததால், 2019ல் மூடப்பட்டது. இதில் இரண்டு வகுப்பறைகள் அங்கன்வாடி மையமாக ஆக்கப்பட்டுள்ளது.

டன்லப் தமிழ் அரசு ஆரம்பப் பள்ளி: உரிகம் என்.டி.பிளாக் எலக்ட்ரிக்கல் காலனியில் டன்லப் தமிழ் அரசு ஆரம்பப் பள்ளி இருந்தது. இங்கு 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை இருந்தது. இது 80 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு 400 மாணவர்கள் தமிழில் கல்வி பயின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை குறைய குறைய இப்பள்ளி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. பள்ளியின் ஒரு கட்டடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது; மற்றொரு கட்டடம் அங்கன்வாடி மையமாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us