மத்திய ஆப்ரிக்காவில் சிக்கிய நாட்டு வைத்தியர்கள் கதி என்ன?
மத்திய ஆப்ரிக்காவில் சிக்கிய நாட்டு வைத்தியர்கள் கதி என்ன?
மத்திய ஆப்ரிக்காவில் சிக்கிய நாட்டு வைத்தியர்கள் கதி என்ன?
ADDED : மார் 24, 2025 02:27 AM

பெங்களூரு : தொழிலுக்காக மத்திய ஆப்ரிக்காவுக்கு சென்ற கர்நாடகாவின் 21 நாட்டு வைத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவித்து அழைத்து வரும்படி, மத்திய, மாநில அரசுகளிடம் வைத்தியர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த பழங்குடியினரான, ஹக்கிபிக்கி சமுதாயத்தினர், மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து, இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் விற்கின்றனர்.
அபராதம்
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், கோபநால் கிராமத்தின் ஒன்பது பேர், ஷிவமொக்காவின், ஹக்கி பிக்கி காலனியைச் சேர்ந்த 12 நாட்டு வைத்தியர்கள் தொழில் நிமித்தமாக, மத்திய ஆப்ரிக்காவின் கபான் நாட்டுக்கு சென்று உள்ளனர். இவர்களில், 10 பெண்களும் அடங்குவர்.
இந்த நாட்டில், சமீபத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2023ல் ஆட்சிக்கு வந்த புதிய அரசு, வெளிநாட்டவரை வெளியேறும்படி உத்தரவிட்டது. நாட்டு வைத்தியர்கள் தங்கியிருந்த இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வைத்தியர்கள் வைத்திருந்த விசா போலியானது என்பது தெரிந்தது. ஆனால், இது போலியானது என்பது வைத்தியர்களுக்கு தெரியவில்லை.
தொழிலுக்காக பயன்படுத்தப்பட்ட விசாக்களை, ஏஜென்ட் ஒருவர் தயாரித்து கொடுத்திருந்தார். அவரையும் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். நாட்டு வைத்தியர்களின் விசா மற்றும் பாஸ்போர்ட்டுகளை கபான் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களுக்கு தலா 2 முதல் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளனர்.
சிறை தண்டனை
இதை செலுத்தாவிட்டால் சிறை தண்டனை விதிப்பதாக எச்சரித்துள்ளனர். நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கிய தங்களை மீட்கும்படி, தங்கள் குடும்பத்தினருக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாட்டு வைத்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வரும்படி, ஹக்கிபிக்கி சமுதாய தலைவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.