ADDED : பிப் 25, 2024 02:39 AM
சண்டிகர்:விவசாயிகள் போராட்டம் காரணமாக, ஹரியானா மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் மொபைல் போன் இணைய தள தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டில்லி சலோ' என்ற போராட்டத்தை கடந்த 13ம் தேதி துவக்கினர்.
டில்லி எல்லையில் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா, கைத்தல், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய மாவட்டங்களில் மொபைல் போன் இணையதள சேவை மற்றும் எஸ்.எம்.எஸ்., சேவை ஆகியவை கடந்த 11ம் தேதியே தடை செய்யப்பட்டன.
இந்நிலையில், ஹரியானா மாநில கூடுதல் தலைமைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் பிறப்பித்துள்ள உத்தரவில், ''அம்பாலா, குருக்ஷேத்ரா, கைத்தல், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய ஏழு மாவட்டங்களிலும் நிலைமை மோசமாகவும் பதட்டமாகவும் நீடிக்கிறது.
''எனவே, இந்த மாவட்டங்களில் மொபைல் போன் இணையதள சேவை மற்றும் எஸ்.எம்.எஸ்., ஆகிய சேவைகளின் தடை நீட்டிக்கப்படுகிறது,”என, கூறப்பட்டுள்ளது.