காங்., இடதுசாரிகள் செய்யாததை செய்துள்ளோம்: பிரதமர் மோடி
காங்., இடதுசாரிகள் செய்யாததை செய்துள்ளோம்: பிரதமர் மோடி
காங்., இடதுசாரிகள் செய்யாததை செய்துள்ளோம்: பிரதமர் மோடி
ADDED : ஜன 04, 2024 01:33 AM

திருச்சூர், ''பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்த நிலையில், பா.ஜ., அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வலிமை
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நடந்த பெண்கள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த இடதுசாரி காங்கிரஸ் அரசு, பெண்களின் வலிமையை குறைத்து மதிப்பிட்டு வந்தது.
எனவே தான் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை காங்., உள்ளிட்ட பிற கட்சிகள் லோக்சபாவில் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வந்தன.
இப்போது பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா பார்லி.,யில் நிறைவேறி சட்டமாகி உள்ளது. இதன் வாயிலாக மோடி அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் வளர்ச்சி அடைந்தால் தான் இந்த நாடும் வளர்ச்சி அடையும். முத்தலாக் நடைமுறையில் இருந்து முஸ்லிம் பெண்களுக்கு பா.ஜ., அரசு சுதந்திரம் பெற்று தந்துள்ளது.
கேரளாவின் வளர்ச்சி
காங்கிரஸ் - இடதுசாரிகள் ஊழலில் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இதை கேரள மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே, பா.ஜ., ஆட்சி மலர்ந்தால் மட்டுமே கேரளாவின் வளர்ச்சி சாத்தியம் என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.
வரும் லோக்சபா தேர்தலில், கேரளாவில் வெற்றிக் கணக்கை பா.ஜ., துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கும், 'இண்டியா' கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.