வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்?
வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்?
வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்?
UPDATED : ஜூன் 12, 2024 05:33 PM
ADDED : ஜூன் 12, 2024 05:12 PM

புதுடில்லி: ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரண்டிலும் வெற்றிப்பெற்று எம்.பி.,யாக தேர்வான நிலையில், ஏதேனும் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரேபரேலி, வயநாடு தொகுதி மக்களை சந்தித்து தன்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கூறிவிட்டு, 'இவற்றில் எதை விடுவது எனத் தெரியவில்லை' என ராகுல், வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், வயநாடு தொகுதி மூலம் தேர்வான எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன், ''தேசத்தை வழிநடத்த வேண்டிய இடத்தில் ராகுல் இருக்கிறார். அதை புரிந்துகொண்டு ராகுலுக்கு கேரள மக்கள் வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்க வேண்டும்'' என சூசகமாக தெரிவித்தார்.
கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் நின்ற ராகுல், வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றிப்பெற்று எம்.பி., ஆனார். ஆனால் தற்போது ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் வென்று, வயநாடு தொகுதியை கைகழுவுகிறார். வயநாட்டில் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.