Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கொரோனாவை விட வீரியமான வைரஸ் பரவும் என எச்சரிக்கை

கொரோனாவை விட வீரியமான வைரஸ் பரவும் என எச்சரிக்கை

கொரோனாவை விட வீரியமான வைரஸ் பரவும் என எச்சரிக்கை

கொரோனாவை விட வீரியமான வைரஸ் பரவும் என எச்சரிக்கை

ADDED : ஜூன் 08, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: கொரோனா தொற்றை ஏற்படுத்திய வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு வகை வைரஸ், வவ்வால்களிடம் காணப்படுகிறது. தற்போதைக்கு ஆபத்து இல்லை என்றாலும், இது உருமாறி மனிதர்களை தாக்கினால், கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு


கடந்த, 2019ல் சீனாவில் முதலில் தென்பட்ட, கொரோனா வைரஸ், உலகெங்கும் பரவி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

அதன் தாக்கம் தற்போதும் தொடர்கிறது. தற்போது, உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் காணப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில், புதிய வகை பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனாவுக்கு முன்பாகவே, 'மெர்ஸ்' என்ற வகை வைரஸ் ஏற்பட்டது.

ஆனால், அது பெரிய அளவில் பரவவில்லை. ஆனால், பாதிப்பு ஏற்பட்டவர்களில், 33 சதவீதம் பேருக்கு மரணத்தை விளைவித்து உள்ளது.

இதன் அடுத்த வடிவமாகவே, கொரோனா வைரஸ் ஏற்பட்டது. 'சார்ஸ் கோவிட்' எனப்படும் இந்த வைரஸ், வெகு வேகமாக உலகெங்கும் பரவியது.

தற்போது இதுபோன்ற, எச்.கே.யு., - 5 என்ற கொரோனா வகை வைரசின் மற்றொரு வடிவம், சீனா மற்றும் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது, தற்போதைக்கு வவ்வால்களில் காணப்படும் ஒரு துணை வகை வைரசாகும். ஒரு சிறிய மாற்றத்துடன் மனித செல்களுக்குள் நுழைந்தால், உலகளாவிய பெருந்தொற்றை உருவாக்கும் அபாயம் உள்ளது.

கொரோனாவைப் போலவே, இதுவும் சுவாச மண்டலத்தின் வாயிலாக மனிதர்கள் உடலுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.

ஆதாரங்கள்


எச்.கே.யு., 5 வகை வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அவை செல்களை பாதிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.

மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை எதுவும் இல்லை. ஆனால், அதற்கான திறன், இந்த புதிய வைரசுக்கு உள்ளதால். அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us