உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சால் வி.ஹெச்.பி.,... ஆதங்கம் ! : ஹிந்து மத நம்பிக்கையை கேலி செய்ததாக புகார்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சால் வி.ஹெச்.பி.,... ஆதங்கம் ! : ஹிந்து மத நம்பிக்கையை கேலி செய்ததாக புகார்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சால் வி.ஹெச்.பி.,... ஆதங்கம் ! : ஹிந்து மத நம்பிக்கையை கேலி செய்ததாக புகார்
ADDED : செப் 18, 2025 11:52 PM

புதுடில்லி: மத்திய பிரதேசத்தின் கஜூராஹோ கோவில் வளாகத்தில் உள்ள விஷ்ணு சிலையை புனரமைப்பது குறித்த வழக்கு விசாரணையின் போது, 'சிலையிடமே கேட்க வேண்டியது தானே' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதையடுத்து, 'அவர் ஹிந்து மத நம்பிக்கையை கேலி செய்கிறார்' என, ஹிந்து அமைப்பான வி.ஹெச்.பி., எனப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள கஜூராஹோ கோவில் சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை.
'யுனஸ்கோ'வின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இக்கோவில் சிற்பங்களை காண, வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த கஜூராஹோ கோவிலின், ஒரு பகுதியான ஜாவரி கோவிலில், ஏழு அடி உயர விஷ்ணு சிலை சேதமடைந்த நிலையில், அதை புனரமைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு கடந்த 16ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது நலத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை.
விளம்பர நோக்கம் பொது விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது எனக் கூறி, தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது, இவ்வழக்கு குறித்து தலைமை நீதிபதி பி .ஆர்.கவாய் கூறியதாவது:
விளம்பர நோக்கத்திற்காகவே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிலையை புனரமைப்பது குறித்து கடவுளிடமே சென்று கேளுங்கள். மகா விஷ்ணுவின் தீவிர பக்தர் என நீங்கள் கூறுவதால், அவரிடமே சென்று பிரார்த்தனை செய்யுங்கள். எதற்காக நீதிமன்றத்தை நாடி வந்தீர்கள். சிலையை புனரமைப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல. அது தொல்லியல் துறையின் வேலை.
சிலையை புனரமைக்கும் அதிகாரம் தொல்லியல் துறையிடம் தான் இருக்கிறது. இதை விட, உச்ச நீதிமன்றத்திற்கு பல முக்கியமான வேலைகள் இருக்கின்றன.
கஜூராஹோ கோவில் வளாகத்திற்குள்ளேயே மிகப் பெரிய சிவலிங்கம் இருக்கிறது. சைவ சமயத்தின் மீது உங்களுக்கு வெறுப்பு இல்லை என்றால், அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துங்கள்.
இவ்வாறு தலைமை நீதிபதி கவாய் கூறினார்.
நம்பிக்கை அவரது இந்தக் கருத்து, சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதப் பொருளாக மாறிய நிலையில், ஹிந்து மதத்தின் நம்பிக்கைகளை தலைமை நீதிபதி கேலி செய்துவிட்டார் என, விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றஞ்சாட்டி உள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளதாவது:
நீதியின் கோவில் நீதிமன்றம். நீதிமன்றங்கள் மீது இந்திய சமூகம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. இந்த நம்பிக்கை வெறும் பெயரளவுக்கு மட்டும் இல்லாமல், வலுவாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
குறிப்பாக நீதிமன்றத்திற்குள் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். அதற்கான கடமை மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கும் இருக்கிறது. ஆனால், அந்த கடமையை தலைமை நீதிபதி மறந்து விட்டாரோ என தோன்றுகிறது.
சிலை புனரமைப்பு வழக்கில் அவர் கூறிய கருத்து, ஹிந்து மத நம்பிக்கைகளை கேலி செய்வது போல இருக்கிறது. இப்படியான கருத்துகளை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.