60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி
ADDED : ஜன 03, 2024 07:38 AM

பெங்களூரு: ''உருமாறிய கொரோனா தொற்றினால் அச்சப்பட வேண்டாம். 60 வயதுக்கு மேற்பட்டோர், வெவ்வேறு நோய்களால் அவதிப்படுவோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இதற்காக, மத்திய அரசிடம் இருந்து, 30,000 தடுப்பூசிகள் வந்துள்ளன,'' என மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.
கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தினமும் 5,000க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பெங்களூரு விகாஸ் சவுதாவில், உயர் அதிகாரிகளுடன், மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், 99 மருத்துவ கல்லுாரிகளின் முக்கியஸ்தர்கள், 10 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர்கள், கொரோனா தொழில்நுட்ப வல்லுனர் குழு உறுப்பினர்கள்பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின், அவர் கூறியதாவது:
உருமாறிய கொரோனா பரவினாலும், ஆய்வின்படி தற்போதைக்கு அதனுடைய வீரியம் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும், அலட்சியமாக இருக்க கூடாது. முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
மத்திய அரசிடம் இருந்து, 30,000 தடுப்பூசிகள், கர்நாடகாவுக்கு வந்துள்ளன. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், வெவ்வேறு நோய்களால் அவதிப்படுவோரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இதற்கு முன், அவர்கள் செலுத்தி கொண்ட தடுப்பூசியே, மீண்டும் செலுத்தப்படும். தகவல்படி, உருமாறிய கொரோனா மிகவும் வேகமாக பரவ உள்ளது. ஆயினும், பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்லும் போது, முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். ஆக்சிஜன், ஐ.சி.யூ., வென்டிலேட்டர், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
மாவட்ட அரசு மருத்துவமனையில், தலா 50 படுக்கைகள் கொரோனா பாதிக்கப்படுவோருக்கு ஒதுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, மருத்துவ கல்லுாரிகளில், 18,141 படுக்கைகளும்; அரசு மருத்துவமனைகளில், 10,000 படுக்கைகளும்; சுகாதார துறைக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் 11,500 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சில உபகரணங்கள் புதிதாக வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர். நிதித்துறைக்கு பட்டியல் அனுப்பி, வாங்கப்படும். கொரோனாவுக்கு, கர்நாடகாவில் சமீபத்தில் 10 பேர் இறந்துள்ளனர். வேறு சில நோய்களும் அவர்களுக்கு இருந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.