Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ காசு கொடுத்து எனக்கு எதிராக பிரசாரம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 'பளிச்'

காசு கொடுத்து எனக்கு எதிராக பிரசாரம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 'பளிச்'

காசு கொடுத்து எனக்கு எதிராக பிரசாரம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 'பளிச்'

காசு கொடுத்து எனக்கு எதிராக பிரசாரம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 'பளிச்'

UPDATED : செப் 12, 2025 07:50 AMADDED : செப் 12, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:''எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரத்தில், அரசியல் ரீதியாக சமூக ஊடகங்களில் என்னை குறிவைத்து தாக்கிப் பேச பணம் கொடுக்கப்படுகிறது,'' என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது, 'இ - 20' பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. 80 சதவீத பெட்ரோல், 20 சதவீத எத்தனால் கலந்ததே இ - 20 பெட்ரோல்.

இதனால், வாகனத்தின் மைலேஜ் குறையும், இன்ஜின் பழுதடையும் என, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இதை திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு, 'இ - 20 பெட்ரோல் கார்பன் வெளியேற்றத்தையும், புதைபடிவ எரிபொருள் இறக்குமதியையும் குறைக்கும்' என, தெரிவித்தது.

இந்நிலையில், டில்லியில் நடந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியதாவது:

ஆட்டோமொபைல் தொழிலிலும் கூட அரசியல் உள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரத்தில், அரசியல் ரீதியாக சமூக ஊடகங்களில் என்னை குறிவைத்து தாக்கிப் பேச பணம் கொடுக்கப்பட்டது.

இ - 20 பெட்ரோல் விவகாரத்தில் அனைத்தும் தெளிவாக உள்ளது. இது, செலவு குறைந்தது; மாசு இல்லாதது; வெளி நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கிறது.

புதைபடிவ எரி பொருட்களை இறக்குமதி செய்ய நம் நாடு பெரும் தொகையை செலவிடுகிறது. இ - 20 பெட்ரோல் மூலம், இது கணிசமாக குறையும்.

இவ் வாறு சேமிக்கப்பட்ட பணத்தை நம் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது நல்ல நடவடிக்கை. மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் கிடைப்பதால், நம் விவசாயிகள், 45,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளனர்.

மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்பதை உலகம் ஒப்புக் கொள்கிறது. டில்லியில் நிலவும் மாசால், அங்குள்ளவர்கள் 10 ஆண்டுகள் ஆயுட்காலத்தை இழப்பர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அரசு, தனியார் பேருந்துகளுக்கு விரைவில் சுங்க கட்டண சலுகை


நிகழ்ச்சியில் அமைச்சர் கட்கரி மேலும் பேசுகையில், ''மாநில போக்குவரத்து கழகங்கள் மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டணத்தில் மாற்றம் செய்ய ஆய்வு நடந்து வருகிறது. பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் வர்த்தக வாகனங்களை இயக்க 10 தேசிய நெடுஞ்சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன,'' என்றார்.
வர்த்தக வாகனமல்லாத தனியார் வாகனங்களுக்கு, 3,000 ரூபாயில் சுங்கக்கட்டண வருடாந்திர பாஸ் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, அரசு, தனியார் பேருந்துகளுக்கென புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us