24ல் துவங்குகிறது புதிய லோக்சபா கூட்டத்தொடர்
24ல் துவங்குகிறது புதிய லோக்சபா கூட்டத்தொடர்
24ல் துவங்குகிறது புதிய லோக்சபா கூட்டத்தொடர்
UPDATED : ஜூன் 13, 2024 10:56 AM
ADDED : ஜூன் 12, 2024 11:50 PM

புதுடில்லி : புதிய லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், 24ல் துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பின், கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் நாற்காலிக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறி வைத்துள்ளன.
இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., இருந்த நிலையில், தற்போது கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கிய கூட்டணி கட்சிகளாக உள்ளன. இதைத் தவிர, மதச்சார்பற்ற ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்., உள்ளிட்டவையும் கூட்டணியில் உள்ளன.
தனிப் பெரும் கட்சி
அமைச்சரவையில் அதிக இடம் மற்றும் முக்கிய துறைகளை தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கோரிய நிலையில், தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில், பா.ஜ., அதிக அமைச்சர்களையும், முக்கிய துறைகளையும் தக்க வைத்துக் கொண்டது.
இந்நிலையில், 18வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர், வரும் 24ல் துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களில், எம்.பி.,க்கள் பதவியேற்க உள்ளனர். இதில், 26ம் தேதி லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. புதிய லோக்சபாவின் முதல் கூட்டம் என்பதால், 27ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு, கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடக்கும். புதிய அமைச்சரவையை, ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைப்பார்.
இதுபோலவே, ராஜ்யசபாவின், 264வது கூட்டத் தொடர், 27ல் துவங்கி, ஜூலை 3ல் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளதால், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, அனல் பறக்கும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்லிமென்ட் தொடர் குறித்து பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: பார்லிமென்டில் தரமான விவாதங்கள் நடக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. அதனால், சபையை சுமுகமாக நடத்துவதற்கு, அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். ஆட்சியை, அரசை நடத்துவதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் உத்தரவிட்டுள்ளனர். யார் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்ற உத்தரவையும் வழங்கியுள்ளனர். இதை அவர்கள் உணர்ந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். நாட்டை மோடி அரசு நடத்தும். பார்லிமென்டை ஆளும் தரப்பும், எதிர்க்கட்சி தரப்பும் இணைந்து வாதங்கள், விவாதங்கள் வாயிலாக நடத்த வேண்டும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், விவாதங்கள் நடத்தி, ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு ரிஜிஜு கூறினார்.