கேபிள் பொருத்துவதில் டெலிகாம் நிறுவனங்கள் முறைகேடு!: பெங்., மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல் 'டிமிக்கி'
கேபிள் பொருத்துவதில் டெலிகாம் நிறுவனங்கள் முறைகேடு!: பெங்., மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல் 'டிமிக்கி'
கேபிள் பொருத்துவதில் டெலிகாம் நிறுவனங்கள் முறைகேடு!: பெங்., மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல் 'டிமிக்கி'
ADDED : ஜூன் 20, 2024 05:48 AM
பெங்களூரு: பெங்களூரில், 'ஆப்டிகல் பைபர் கேபிள்' பொருத்துவதில், தனியார் டெலிகாம் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. மாநகராட்சிக்கு முறைப்படி கட்டணம் செலுத்தாமல், 'டிமிக்கி' கொடுத்து வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன.
பெங்களூரில், 'ஆப்டிகல் பைபர் கேபிள்' எனும் ஓ.எப்.சி., பொருத்துவதில், பல ஆண்டுகளாகவே முறைகேடு நடக்கிறது. இவற்றை அகற்ற மாநகராட்சி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
குறைவான கட்டணம்
கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, சாலைகளை மேம்படுத்துவதும், இதை தனியார் டெலிகாம் நிறுவனங்கள், கேபிள் நிறுவனங்கள் தோண்டி பாழாக்கி, கேபிள் பொருத்துவதும் வழக்கமாக உள்ளது.
தனியார் டெலிகாம் நிறுவனங்களால், மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பொது மக்களின் நிலம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
ஓ.எப்.சி., பொருத்த அனுமதி அளிக்கப்பட்ட கோப்புகளை, கணக்கு தணிக்கை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2019 நவம்பர் 29ல், ஓ.எப்.சி., பொருத்த கட்டணம் நிர்ணயித்து, மாநகராட்சி கமிஷனர் உத்தரவு வெளியிட்டார்.
ஆனால் இந்த உத்தரவை பொருட்படுத்தாமல், நிர்ணயித்த கட்டணத்தை விட, குறைவான கட்டணம் வசூலித்து, டெலிகாம் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் வசதி செய்து கொடுத்துள்ளனர். இதன் மூலம் தங்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதாக கூறப்படுகிறது.
நிர்ணயித்த கட்டணத்தை விட, குறைவான கட்டணம் வசூலித்ததால், மூன்று ஆண்டுகளில் மாநகராட்சிக்கு 86.65 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மீட்டர் கேபிள் பொருத்த, 850 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில தனியார் நிறுவனங்கள், 10 கி.மீ., தொலைவில் கேபிள் பொருத்த அனுமதி பெற்று, 10 மடங்கு அதிகமான கேபிள்களை பொருத்தி, மாநகராட்சியின் கண்களில் மண்ணை துாவுகின்றனர்.
உயிருக்கு அபாயம்
பெங்களூரு மாநகராட்சி மேம்படுத்திய டெண்டர் ஷியூர் சாலைகளில், ஓ.எப்.சி., கேபிள்கள் பொருத்த குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக கேபிள் பொருத்த வேண்டும். இதில் ஒரு மீட்டர் கேபிள் பொருத்த, 1,500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி குழாய்களில் கேபிள் பொருத்துவதில்லை. மாறாக மரங்கள், மின் கம்பங்கள், கட்டடம், டிராபிக் சிக்னல் கம்பங்கள் என கண்ட, கண்ட இடங்களில் கேபிள்களை பொருத்துகின்றனர்.
இதனால் நகரின் அழகு பாழாவதுடன், கண்டபடி தொங்கும் கேபிள்கள், பாதசாரிகள், வாகன பயணியரின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது. கேபிள்களால் விபத்து ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
வருவாய் இழப்பு
தனியார் டெலிகாம் நிறுவனங்களின் முறைகேடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிந்தும், கண்டும், காணாமல் உள்ளனர். இதன் மூலம் மாநகராட்சியின் வருவாய் இழப்புக்கு காரணமாகின்றனர்.
ஓ.எப்.சி., கேபிள் பொருத்தும் டெலிகாம் நிறுவனங்களிடம் மட்டுமின்றி, தொலை தொடர்பு டவர்கள் பொருத்தவும், மாநகராட்சி அதிகாரிகள் சரியாக வரி வசூலிக்கவில்லை. ஒவ்வொரு டவரும் பொருத்த 23,164 ரூபாய் வரி வசூலித்திருக்க வேண்டும். ஆனால், 3,448 டவர்களில் இதுவரை வரியே வசூலிக்காததும், கணக்கு தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. பாக்கியுள்ள 7.98 கோடி ரூபாயை வசூலிக்கும்படி, வருவாய்ப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.