அவசரநிலைக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர்: லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி
அவசரநிலைக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர்: லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி
அவசரநிலைக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர்: லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி
UPDATED : ஜூன் 26, 2024 01:50 PM
ADDED : ஜூன் 26, 2024 01:30 PM

புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா பதவிக்காலத்தில் அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டதற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கண்டனம் தெரிவித்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
லோக்சபா சபாநாயகராக பதவியேற்ற பிறகு ஓம்பிர்லா பேசியதாவது: இந்த அவையின் சபாநாயகராக மீண்டும் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் நன்றி.
இந்த 18 வது லோக்சபா உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக உள்ளது.பல்வேறு சவால்களை தாண்டி 64 கோடி பேர் ஓட்டுப் போட்டு உள்ளனர். இந்த அவை சார்பாக அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். நெடுந்தொலைவில் உள்ள ஒவ்வொரு ஓட்டை பெறவும், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
பிரதமர் மோடி தலைமையில், தேஜ கூட்டணி அரசு தொடர்ந்து 3வது முறையாக அமைந்துள்ளது. கடந்த தசாப்தத்தில், மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை மற்றும் விருப்பங்கள் அதிகரித்துள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகளை நிறைவே்ற நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, அவசர நிலை பிரகடனத்திற்கு கண்டனம் தெரிவித்து அவர் பேசுகையில், ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக அவசர நிலை உள்ளது. அப்போது சட்டவிரோத கைதுகள் நடந்தன. நாட்டையே சிறையாக மாற்றியது அவசர நிலை, நம் நாட்டில் அநியாயம் நிகழ்ந்த காலம் அது. இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். நாட்டில் தற்போது அவசரப்படாத அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டி கட்சிகள் கோஷம் போட்டன. இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.