Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பார்க்கிங் பிரச்னையால் உயிரிழந்த விஞ்ஞானி: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்

பார்க்கிங் பிரச்னையால் உயிரிழந்த விஞ்ஞானி: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்

பார்க்கிங் பிரச்னையால் உயிரிழந்த விஞ்ஞானி: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்

பார்க்கிங் பிரச்னையால் உயிரிழந்த விஞ்ஞானி: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்

ADDED : மார் 13, 2025 04:30 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: சாதாரண பார்க்கிங் பிரச்சினை காரணமாக ஒரு விஞ்ஞானி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) பணிபுரிந்தவர் விஞ்ஞானி அபிஷேக் ஸ்வர்ண்கர். வாடகை வீட்டிற்கு வாகனம் நிறுத்துவது தொடர்பாக இவருக்கும், பக்கத்து வீட்டாருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.

இந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரர் தாக்கியதில் அபிஷேக் உயிரிழந்தார்.

சம்பவத்தின் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகியுள்ளன, அப்பகுதியில் வசிக்கும் சிலர் ஒரு பைக்கின் அருகே நிற்பதைக் காண முடிந்தது. பின்னர் விஞ்ஞானி அபிஷேக் இரு சக்கர வாகனத்தை நோக்கி நடந்து செல்கிறார், அதை தொடர்ந்து அவர்களுடன் ஏதோ பேசுகிறார். இரு சக்கர வாகனத்தை அங்கிருந்து அகற்றுகிறார். சில நொடிகளில், குடியிருப்பாளர்களில் ஒருவருக்கும் விஞ்ஞானிக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.

பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் விஞ்ஞானியை தரையில் தள்ளி அடிக்கத் தொடங்குகிறார். இருவரின் குடும்பங்களும் உடனடியாக தலையிடுகின்றன. ஆனால் விஞ்ஞானி நிற்க முடியாமல் தரையில் சரிந்து விழுகிறார்.

விஞ்ஞானி அபிஷேக் ஸ்வர்ண்கர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர், சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவருக்கு டயாலிசிஸும் செய்யப்பட்டது. இரண்டு நாள்களுக்கு முன் நடந்த மோதலைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்து, இறுதியில் இறந்துவிட்டார்.

சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ககன்தீப் சிங் கூறியதாவது:

சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர் சம்பவத்திற்குப் பிறகு காணவில்லை, அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

அபிஷேக் குடும்பத்தினர் நேற்று மொஹாலிக்கு வந்தனர் இன்று அவரது பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து மேற்கொண்டு விசாரணைகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு ககன்தீப் சிங் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us