சபரிமலை கோவில் கூட்ட நெரிசல்: கேரள சட்டசபையில் காரசார விவாதம்
சபரிமலை கோவில் கூட்ட நெரிசல்: கேரள சட்டசபையில் காரசார விவாதம்
சபரிமலை கோவில் கூட்ட நெரிசல்: கேரள சட்டசபையில் காரசார விவாதம்
UPDATED : பிப் 01, 2024 11:00 AM
ADDED : ஜன 31, 2024 11:40 PM

திருவனந்தபுரம்: ''சபரிமலையில் வழிபாடு மேற்கொள்ள முடியாமல், தாங்கள் அணிந்த புனித மாலையை அகற்றியவர்கள், உண்மையான பக்தர்களாக இருக்க மாட்டார்கள்,'' என, கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கட்டுப்பாடுகள்
கேரள சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் எம்.வின்சென்ட், ''சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மகரவிளக்கு பூஜையின்போது பக்தர்களுக்கு மாநில போலீசாரால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
''இதனால், அய்யப்ப பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியதுடன், தாங்கள் அணிந்திருந்த புனித மாலையை கோவிலின் முன்வைத்து அகற்றினர்,'' என குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பந்தளம் தர்மசாஸ்தா கோவிலில் மகரவிளக்கு பூஜையின்போது இந்தாண்டு வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்தனர்.
'ஸ்பாட் புக்கிங்' வசதி
முதலில் வரிசையில் 90,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன்பின் 80,000 ஆக குறைக்கப்பட்டது.
இது தவிர, 'ஸ்பாட் புக்கிங்' வசதி மற்றும் மலைப்பாதைகளின் வாயிலாகவும் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள வந்ததால், வரலாறு காணாத அளவிற்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை எனில், சன்னிதானத்திலும், கோவில் வளாகத்திலும் கூட்ட நெரிசல் அதிகரித்து, மேலும் பல சிக்கல்கள் உருவாகி இருக்கும்.
வழக்கமாக சபரிமலைக்கு வரும் உண்மையான பக்தர்கள் தாங்கள் அணிந்துள்ள புனித மாலையை கழற்றுவதையோ, தேங்காயை உடைப்பதையோ விரும்ப மாட்டார்கள். அய்யப்பனை வழிபட்ட பின், புனித மாலையை அகற்றுவர்.
எனவே, பக்தி என்ற பெயரில் பொய்யாக வலம் வரும் நபர்களே இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது போன்ற பொய் பிரசாரங்களை பரப்பும் நபர்களை கண்டறிந்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.