லட்சத்தீவு பயண அனுபவம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
லட்சத்தீவு பயண அனுபவம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
லட்சத்தீவு பயண அனுபவம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
ADDED : ஜன 05, 2024 01:33 AM

புதுடில்லி, 'நாட்டில் உள்ள 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக, இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற சிந்தனையை லட்சத் தீவு அனுபவங்கள் தந்தன' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக கடந்த 2ம் தேதி, யூனியன் பிரதேசமான லட்சத்தீவு சென்றார். அங்கு மத்திய அரசின் திட்டங்களை அவர் துவக்கி வைத்தார்.
இந்த பயணத்தின் போது, கடலுக்கு அடியில் நீந்தி சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கும் சாகசத்திலும் பிரதமர் ஈடுபட்டார். இது குறித்த அனுபவங்களை புகைப்படங்களுடன் தன் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல; காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களின் சான்று. கற்பதற்கும், வளர்வதற்குமான வாய்ப்பை மாலத்தீவு பயணம் எனக்கு தந்தது.
அதன் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்குள்ள மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் பார்த்து, இன்னமும் நான் பிரமிப்பில் இருக்கிறேன்.
வளர்ச்சியின் வாயிலாக லட்சத்தீவு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே மத்திய அரசின் நோக்கம்.
சிறந்த உள்கட்டமைப்பு, சுகாதாரம், வேகமான இணைய சேவை, குடிநீர் ஆகிய வசதிகளை ஏற்படுத்துவதுடன், உள்ளூர் கலாசாரத்தை பாதுகாத்து கொண்டாடுவதையும் அரசின் நோக்கமாக உள்ளது.
இங்கு துவக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் இந்த உணர்வை பிரதிபலிக்கின்றன.
அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடும் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம், லட்சத் தீவின் இயற்கை அழகும், அமைதியும் மெய்சிலிர்க்க வைத்தது. நாட்டின் 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைப்பது குறித்து சிந்திக்கும் வாய்ப்பை எனக்கு அது தந்தது.
'ஸ்னோர்கெல்லிங்' எனப்படும் கடலுக்குள் மூழ்கி உள்ளே இருக்கும் இயற்கை அழகை காணும் முயற்சியிலும் நான் அங்கு ஈடுபட்டேன்.
அது ஓர் உற்சாகமான அனுபவம். அழகிய கடற்கரையில் அதிகாலை பொழுதில் நடைபயிற்சி மேற்கொண்டது துாய்மையான பேரின்பத்தை தந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.