பட்ஜெட் விவகாரத்தில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்: மத்திய அமைச்சர்
பட்ஜெட் விவகாரத்தில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்: மத்திய அமைச்சர்
பட்ஜெட் விவகாரத்தில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்: மத்திய அமைச்சர்
ADDED : ஜூலை 25, 2024 11:01 AM

புதுடில்லி: பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகளை பேசாமல், அதில் அரசியல் செய்வதாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் கடந்த ஜூலை 23ல் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பீஹார், ஆந்திரா உள்ளிட்ட பா.ஜ., கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி இண்டியா கூட்டணியினர் நேற்று (ஜூலை 24) பார்லி., வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், இதே விவகாரத்தை முன்னிறுத்தி லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பட்ஜெட் பற்றி சில எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிய கருத்துகளை கண்டிக்கிறேன். பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகளை பேசாமல், அதில் அரசியல்தான் செய்கிறார்கள். மக்களின் தீர்ப்பை அவமதித்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. பட்ஜெட் மீதான விவாதம் நல்லதாகவும், அர்த்தமுள்ளதாகவும் நடைபெறுவதை நாடு பார்க்க விரும்புகிறது.
கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேசிய விதம், பார்லி.,யின் கண்ணியத்தை குறைத்து, அவையை அவமதிப்பதாக உள்ளது. பட்ஜெட்டில் உள்ள நல்ல அம்சத்தை கூட குறிப்பிடாமல் தவறாக பேசுகின்றனர். பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகள், இட ஒதுக்கீடு, பெண்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதனை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை என்றால், மக்கள் அவர்களை தண்டிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.