ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாக வரும்! ராஜ்நாத் சிங் நம்பிக்கை
ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாக வரும்! ராஜ்நாத் சிங் நம்பிக்கை
ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாக வரும்! ராஜ்நாத் சிங் நம்பிக்கை
ADDED : மே 29, 2025 11:52 PM

புதுடில்லி: ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள், இந்திய குடும்பத்தின் ஒரு பகுதி. இதை உணர்ந்து அவர்கள் தாங்களாகவே வந்து சேருவர்'' என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
டில்லியில் நேற்று நடந்த, சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழிலக கூட்டமைப்பின் வர்த்தக மாநாட்டில், பா.ஜ.,வைச் சேர்ந்த நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பயங்கரவாதம் என்பது லாபகரமான தொழில் அல்ல என்பதை பாகிஸ்தான் புரிந்து கொண்டிருக்கும்.
மூளைச்சலவை
அதற்காக அந்த நாடு எவ்வளவு பெரிய விலையை கொடுக்க நேர்ந்துள்ளது. மேலும், பெரிய அளவில் இழப்புகளை சந்தித்துள்ளது.
பாகிஸ்தானுடன் இனி பேசுவதாக இருந்தால், அது பயங்கரவாதம் தொடர்பாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நம்மிடம் ஒப்படைப்பது தொடர்பாகவும் மட்டுமே இருக்கும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது, இந்தியாவின் ஒரு பகுதியே. சில அரசியல் மற்றும் புவியியல் காரணங்களால் அது பிரிந்து உள்ளது.
அங்குள்ள பெரும்பாலான மக்கள், தற்போதும் இந்தியாவில் இணைந்திருக்கவே விரும்புகின்றனர். ஒரு சிலர்தான் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.
நடவடிக்கை
அங்குள்ள நம் சகோதர - சகோதரிகள் தங்களுடைய மனசாட்சியைக் கேட்டு நடந்தால், இந்த உண்மையை புரிந்து கொள்வர். அவர்கள் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விரைவில் இந்திய குடும்பத்தில் தாங்களாகவே வந்து சேருவர்.
நம் ராணுவத்தின் பலத்தை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளோம். 10 ஆண்டுகளுக்கு முன், 1,000 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி தற்போது, 23,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு ராணுவத் தளவாடங்கள் மிகவும் சிறப்பானவை என்பதை, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைகள் மற்றும் அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் நடந்த மோதலில் காட்டியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.