முருகா சரணருக்கு ஜாமின் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ்
முருகா சரணருக்கு ஜாமின் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ்
முருகா சரணருக்கு ஜாமின் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ்
ADDED : ஜன 31, 2024 07:35 AM

பெங்களூரு : போக்சோ சட்டத்தில் கைதான, முருகா மடத்தின் சிவமூர்த்தி முருகா சரணருக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சித்ரதுர்காவின் முருகா மடமும், பிரபலமான மடங்களில் ஒன்றாகும். மடம் சார்பில் பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. மடம் சார்ந்த உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவியரை, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சில மாணவியர், பெண்களுக்காக போராடும் மைசூரின் ஒடனாடி தன்னார்வ தொண்டு அமைப்பின் உதவியுடன், மைசூரின் நஜர்பாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார், சிவமூர்த்தி சரணரு மீது, 'போக்சோ' வழக்குப் பதிவு செய்தனர்.
அதன்பின் இந்த வழக்கு, சித்ரதுர்கா நகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 2022 செப்டம்பர் 1ல், சிவமூர்த்தி முருகா சரணருவை போலீசார் கைது செய்தனர். இவர் மீது தனித்தனி வழக்குகள் பதிவாகின. இவருக்கு 2023 நவம்பரில் கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இதை எதிர்த்து ஒடனாடி அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்தது. மனுவை அங்கீகரித்து, நேற்று விசாரணையை துவக்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சதீஷ் சர்மா, கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டது.