Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதா? டில்லியில் ஏற்பட்ட பரபரப்பு!

புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதா? டில்லியில் ஏற்பட்ட பரபரப்பு!

புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதா? டில்லியில் ஏற்பட்ட பரபரப்பு!

புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதா? டில்லியில் ஏற்பட்ட பரபரப்பு!

ADDED : ஜன 05, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி, மதுபான கொள்கை ஊழல் வழக்கில், புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியானதால், நேற்று அவரது வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பரபரப்பு நிலவியது.

விசாரணை


புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் பெரும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, ஜூலை 2022ல் மதுபான கொள்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்த புதிய மதுபான கொள்கை வாயிலாக குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பயனடைந்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் பணம் லஞ்சமாக கைமாறியுள்ளதாகவும் புகார் எழுந்தது.

அதனடிப்படையில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்துகிறது.

இந்த வழக்குகளில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங், விஜய் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலையும் விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் அனுப்பப்பட்ட நோட்டீசையும் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.

மிகப்பெரிய சொத்து


இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் நேற்று பரவியது. கெஜ்ரிவாலின் வீட்டின் முன், கட்சியினர் மற்றும் ஊடகத்தினர் திரண்டனர்.

இதையடுத்து அவரது வீட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால் இரவு வரை அவர் கைது செய்யப்படவில்லை. இது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

இரண்டு ஆண்டுகளாக மதுபான கொள்கை ஊழல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், என்னிடம் விசாரிக்க வேண்டும் என்கின்றனர்.

மக்களிடம் எனக்கு உள்ள நற்பெயரை சீர்குலைக்கவும், லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கவும், கைது செய்ய முயற்சிக்கின்றனர்.

அதற்காக அமலாக்கத்துறையை மத்திய பா.ஜ., அரசு பயன்படுத்துகிறது. நேர்மை தான் என்னுடைய மிகப்பெரிய சொத்து.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us