மாலுாரின் அலங்கார ஓடுகளுக்கு மவுசு அதிகரிப்பு
மாலுாரின் அலங்கார ஓடுகளுக்கு மவுசு அதிகரிப்பு
மாலுாரின் அலங்கார ஓடுகளுக்கு மவுசு அதிகரிப்பு
ADDED : பிப் 24, 2024 10:59 PM

அதிநவீன காலத்திலும், ஓடுகளுக்கு மவுசு குறையவில்லை. பழமையும், புதுமையும் கலந்து வீடு கட்ட விரும்பும் பலரும், அலங்கார ஓடுகளை பயன்படுத்தி, வீடுகளை அழகாக்குகின்றனர்.
கோலார், மாலுாரின் ஓடுகள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒரு காலத்தில் ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு, மாலுாரு பிரசித்தி பெற்றிருந்தது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுத்தது.
தாலுகாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஓடுகள் தொழிற்சாலைகள், ஊன்றுகோலாக இருந்தன. ஆனால் தற்போது இந்த தொழிற்சாலைகள், அலங்கார ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன.
கடந்த 1865ல், மாலுாரின் குழவர் சமுதாயத்தினர், ஓடு தொழிற்சாலைகளை ஆரம்பித்தனர். ரயில்வே நிலைய புறநகரில் துவங்கப்பட்ட ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும், செங்கற்களால் கட்டப்பட்ட 100 அடி சிம்னி இருந்ததன.
ஈர களிமண்ணினால் தயாரிக்கப்பட்ட ஓடுகள், செங்கல்களை சுடும் போது, அந்த சிம்னி வழியாக புகை வெளியேறும். இந்த தொழிற்சாலைகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தன.
நாளடைவில் ஓடுகளுக்கு மவுசு குறைந்ததால், ஓடு தொழிற்சாலைகள், செங்கல் தொழிற்சாலைகளாக மாறின. நீலகிரி மரங்களை வளர்க்க, அரசு தடை விதித்த பின், பெரும்பாலான விவசாயிகள் உட்பட, பலர் தங்களின் நிலங்களில் செங்கல் தொழிற்சாலை அமைத்தனர்.
மாலுாரில் இதற்கு முன், 300க்கும் மேற்பட்ட ஓடு தொழிற்சாலைகள் இருந்தன. சமீப ஆண்டுகளாக செங்கல்லுக்கும் தேவை குறைந்தது.
எனவே அலங்கார ஓடுகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஓடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
ஓடுகள் தயாரிக்க களிமண் மிகவும் அவசியம். இது உள்ளூரில் சில ஏரிகளில் கிடைக்கிறது.
களிமண்ணை லாரிகளில் கொண்டு வந்து, இயந்திரங்களின் உதவியுடன் கலை ஓவியங்கள் வரையப்பட்ட அலங்கார ஓடுகள் தயாராகின்றன. சிமென்ட் மேற்கூரை மீது, அலங்கார ஓடுகளை பொருத்தி, வீடுகளை அழகாக்குவது தற்போதைய ட்ரென்ட். ஒரு ஓடு விலை 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உள்ளது.
மாலுாரில் தயாராகும் அலங்கார ஓடுகள், பெங்களூரு, தமிழகத்தின் ஓசூர் உட்பட, பல்வேறு இடங்களில் அதிக டிமாண்ட் உள்ளது.
குறிப்பாக செங்கல்லை விட, அலங்கார ஓடுகளுக்கு அதிக மவுசு உள்ளது. புதிய வீடுகள் கட்டும் பலரும், அலங்கார ஓடுகளை பயன்படுத்துகின்றனர்.
இப்படி கட்டப்பட்ட வீடுகள், பழைமையும், புதுமையும் கலந்து அழகாக காட்சி அளிக்கின்றன.
- நமது நிருபர் -