கணவருடனான தகராறில் மகளை கொன்ற தாய் கைது
கணவருடனான தகராறில் மகளை கொன்ற தாய் கைது
கணவருடனான தகராறில் மகளை கொன்ற தாய் கைது
ADDED : ஜூன் 09, 2025 11:51 PM

ஹாசன்: கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையில், 6 வயது மகளை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவை சேர்ந்தவர் ரகு, 39. இவரது மனைவி ஸ்வேதா, 36. இந்த தம்பதிக்கு 2018ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, 6 வயதில் சான்வி என்ற பெண் குழந்தை இருந்தது. தம்பதி பெங்களூரின் நெலமங்களாவில் வசித்தனர்.
விவாகரத்து
நெலமங்களா அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில், ரகு பணியாற்றுகிறார். கார்மென்ட்ஸ் தொழிற்சாலையில் ஸ்வேதா பணியாற்றி வந்தார்.
தம்பதி புரிதல் இல்லாமல் தினமும் சண்டை போட்டனர். இரு வீட்டாரும் பலமுறை சமாதானம் செய்தும் பயன் இல்லை. சட்டப்படி பிரிய முடிவு செய்து, நெலமங்களா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருவரும் மனு தாக்கல் செய்துஉள்ளனர்.
“விவாகரத்தாகும் வரை உங்களுடன் இருக்கிறேன்,” என, கூறி கணவருடன் ஸ்வேதா வசித்து வந்தார். இவர்களின் மகள் சான்வி, ரகுவின் பெற்றோர் பராமரிப்பில் பெங்களூரில் இருந்தார்.
திடீரென பெங்களூருக்கு சென்ற ஸ்வேதா, மகளை அழைத்துக் கொண்டு, ஹாசனின் ஜின்னேனஹள்ளி கொப்பலு கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார்.
நேற்று காலை 9:00 மணியளவில், மகளை தோட்டத்துக்கு ஸ்வேதா அழைத்துச் சென்றார். அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மகளை தள்ளி, காலால் மிதித்து நீரில் அழுத்தி, கொலை செய்ய முயற்சித்தார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து நிலத்தில் இருந்த விவசாயிகள் ஓடி வந்தனர்.
அவர்களிடம் ஸ்வேதா, “நாங்கள் தற்கொலை செய்து கொள்ள வந்தோம். மகளை தள்ளிவிட்டேன். நானும் விழுகிறேன்,” என, அழுதுபுரண்டு நாடகமாடினார்.
சிறுமியை மீட்ட விவசாயிகள், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டார். ஸ்வேதாவை, ஹிரிசாவே போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரகுவுக்கும் தகவல் கொடுத்தனர். ஸ்வேதாவை போலீசார் கைது செய்தனர்.
குற்றச்சாட்டு
போலீசில், “எங்களுக்கு விவாகரத்து ஆன பின், மகளை என் கணவர் அழைத்துச் சென்றுவிடுவார். அதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காக மகளை கொலை செய்தேன்,” என, ஸ்வேதா கூறியுள்ளார்.
ஆனால், “ஸ்வேதாவுக்கு, கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளது. பணிக்கு சென்றால், சில நாட்களுக்கு வீட்டுக்கே வரமாட்டார். அவரது நடத்தை சரியில்லை,” என, ரகு குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்வேதாவுக்கு தாய், தந்தை இல்லை. இவர் உட்பட, ஏழு சகோதரியர் உள்ளனர். அனைவரும் திருமணமாகி கணவருடன் வசிக்கின்றனர். பண்டிகை நாட்களில் சகோதரியர் ஒன்று கூடுவது வழக்கம். சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வந்தனர்.