ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பரிதாப பலி
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பரிதாப பலி
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பரிதாப பலி

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குல்சார் ஹவுஸில், ஒரு நகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தின் முதல் மாடிக்கு தீ பரவியது. மூன்று மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தில் தீ மளமளவென பரவியது.
நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல்
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொலைபேசியில் பேசி, அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நிவாரணம் அறிவிப்பு
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.