இந்தியாவின் 3 நாள் 'ஆப்பரேஷன் சிந்துார்'; துாள் துாளானது பாக்., 'இரும்புச்சுவர்'
இந்தியாவின் 3 நாள் 'ஆப்பரேஷன் சிந்துார்'; துாள் துாளானது பாக்., 'இரும்புச்சுவர்'
இந்தியாவின் 3 நாள் 'ஆப்பரேஷன் சிந்துார்'; துாள் துாளானது பாக்., 'இரும்புச்சுவர்'

எல்லையில் வாலாட்டி, போர் பதற்றத்தை ஏற்படுத்தியது பாகிஸ்தான். ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக, தக்க பதிலடி தந்தது இந்தியா.
அதிகம் அடிவாங்கிய நிலையில், இந்தியாவுக்கு எதிரான போருக்கு, 'புன்யான் அல் -மார்சஸ்' என பெயர் வைத்தது பாகிஸ்தான். இதற்கு 'இரும்புச்சுவர்' என அர்த்தம். ஏற்கனவே, துருப்பிடித்து போன பாகிஸ்தானுக்கு இந்த பெயர், சிறிதளவிலும் பொருந்தாது என்பது உலகுக்கே வெளிச்சம்.
இரும்புச்சுவராக இருந்தால், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை ஊடுருவி சென்று, இந்தியாவால் அழித்திருக்க முடியுமா? கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், இஸ்லாமாபாத் என முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி, அதன் விலா எலும்புகளை நொறுக்க முடிந்திருக்குமா?
![]() |
ட்ரோன்கள் காலி
கட்டுப்பாடு எல்லைக்கோடு அருகே உள்ள மாநிலங்களை குறிவைத்து, பாக்., 'ட்ரோன்' தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவில் என்ன நடக்கிறது என ட்ரோன்களை அனுப்பி வேவுபார்க்க நினைத்தது. ஆனால், அத்தனை ட்ரோன்களும், இந்திய தடுப்பு அரண்களுக்கு முன் காலியாயின.
நேற்று முன்தினம் இரவு, ட்ரோன்களில் வெடிமருந்துகளை அனுப்பி தாக்க திட்டமிட்டது. அதில் ஒன்று பஞ்சாபில் ஒரு வீட்டில் விழுந்து, மூன்று பேர் காயமடைந்தனர். பீரங்கி தாக்குதலை மட்டுமே நம்பியுள்ள, பாகிஸ்தான், இனி எல்லையில் படை திரட்டி தாக்கலாம் என வியூகம் வகுத்தது.
எல்லை மாநிலங்களில் மட்டும், அத்துமீறி தாக்கும் பாகிஸ்தானால் தனது சொந்த பூமியை காக்க முடியவில்லை. பலுசிஸ்தான் விடுதலைப்படை தாக்குதலில், பாக்., ராணுவ வீரர்கள் பலர் கொத்து கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் குவெட்டா நகரை கைப்பற்றுவதிலும், தனிநாடாக அறிவிப்பதில் பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நேற்று அதிகாலையில் இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில், பாகிஸ்தான் ராவல்பிண்டி சக்லாலாவில் உள்ள நுர்கான் விமான படைதளம் கடுமையான சேதம் அடைந்தது. இதேபோல், முரிட், ரபீக்கி உட்பட மொத்தம் எட்டு விமான படை தளங்களும் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. இதை பாகிஸ்தான், ராணுவ செய்தித் தொடர்பாளர், லெப்டினன்ட் ஜெனரல் அஹமது ஷெரீப் சவுத்ரி உறுதிப்படுத்தினார்.
இந்தியா மீது பாகிஸ்தான் ஏவும் ஏவுகணைகள் ஒன்று கூட இலக்கை எட்டவில்லை; வரும் வழியிலேயே இந்தியாவின் வான்பாதுகாப்பு கவசம், அதிரடியாக செயல்பட்டு, அவற்றை அழித்து ஒழித்தன. இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டால், நான்கு நாள் கூட தாங்காது என கூறப்பட்டது. ஆனால், மூன்றாவது நாளிலேயே பாக்., துவண்டுபோய் விட்டது. அந்நாட்டின் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்புகளும், ரேடார்களும் செயலிழந்து விட்டதால், வெறும் தகர டப்பாவாக மாறியது இரும்புச்சுவர்.
--நமது நிருபர்-