அரசியல்வாதியாக இறக்க மாட்டேன்! பா.ஜ., - எம்.பி., ஹெக்டே உருக்கம்
அரசியல்வாதியாக இறக்க மாட்டேன்! பா.ஜ., - எம்.பி., ஹெக்டே உருக்கம்
அரசியல்வாதியாக இறக்க மாட்டேன்! பா.ஜ., - எம்.பி., ஹெக்டே உருக்கம்
ADDED : பிப் 24, 2024 11:03 PM

கார்வார்: ''அரசியல்வாதியாக இறக்க மாட்டேன்,'' என, பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே உருக்கமாக கூறியுள்ளார்.
உத்தர கன்னடா லோக்சபா தொகுதியில் இருந்து, பா.ஜ., - எம்.பி.,யாக தேர்வு ஆனவர் அனந்த்குமார் ஹெக்டே, 55. பிரதமர் மோடியின் அமைச்சரவையில், திறன் மேம்பாடு அமைச்சராகவும் பணியாற்றினார். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கூட, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை.
கடந்த ஒரு மாதமாக, திடீரென தீவிர அரசியலில் களம் இறங்கி உள்ளார். லோக்சபா தேர்தல் 'சீட்' பெற முயற்சி செய்கிறார். ஆனால் இதற்கு உத்தர கன்னடா மாவட்ட பா.ஜ.,வில், எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் முண்டகோடில் நேற்று நடந்த, தொண்டர்கள் கூட்டத்தில் அனந்த்குமார் ஹெக்டே பேசுகையில்:
கடந்த இரண்டு லோக்சபா தேர்தலிலும் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. என்னை விட்டுவிடுங்கள் என்று உங்களிடம் கூறினேன். ஆனாலும் என்னை தேர்தலில் போட்டியிட வைத்தீர்கள். கொரோனா என்னை தாக்கியது. உடல்நலமும் பாதிக்கப்பட்டது.
அதன்பின்னர் அரசியல் வேண்டாம் என்று மன உறுதியுடன் இருந்தேன். ஆனால் தற்போது லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். பிறக்கும்போது நான் அரசியல்வாதியாக பிறக்கவில்லை. இறக்கும்போதும் அரசியல்வாதியாக இறக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.
மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், மக்கள் பணத்தை கொள்ளையடிக்க பார்க்கிறது. இவ்வளவு மோசமான அரசை நான் பார்த்தது இல்லை. அதிக வரி கட்டுபவர்கள் ஹிந்துக்கள் தான். ஆனால் கர்நாடகா அரசு, பாழடைந்த கோவில்களை பராமரிக்க, பணம் ஒதுக்குவது இல்லை. ஆனால் மசூதிகள், தேவாலத்திற்கு பணம் கொடுக்கின்றனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆடசியில் இருந்த போது, சாலைகள், அரசு திட்டங்களுக்கு அப்பா, மகன் பெயரை வைத்தனர். ஆனால் அரசு திட்டங்களுக்கு பிரதமர் மோடி என்றாவது அவர் பெயர் வைத்து உள்ளாரா?
இவ்வாறு அவர் பேசினார்.