எச்.ஐ.வி பாதித்த 828 மாணவர்கள்: திரிபுராவில் ‛திடுக்'
எச்.ஐ.வி பாதித்த 828 மாணவர்கள்: திரிபுராவில் ‛திடுக்'
எச்.ஐ.வி பாதித்த 828 மாணவர்கள்: திரிபுராவில் ‛திடுக்'
ADDED : ஜூலை 10, 2024 12:17 PM

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 47 மாணவர்கள் எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
எச்.ஐ.வி என்னும் எய்ட்ஸ் தொற்றை குணமாக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதேநேரத்தில், இந்த நோயை கட்டுப்படுத்த சில மருந்துகள் இருக்கின்றன. இந்த கொடிய நோய் மாநிலத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரவியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இத்தொற்றினால் பாதிக்கப்பட்ட 47 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொற்று பரவியது எப்படி
?
புகாருக்கு உள்ளான 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் பலர் போதைக்கு அடிமையாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. ஒரே ஊசி மூலம் பலர் போதை மருந்தை உடலில் செலுத்திக்கொள்வதால் எச்.ஐ.வி பரவியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.