'கோ பேக் அமித் ஷா' காங்கிரசார் போராட்டம்
'கோ பேக் அமித் ஷா' காங்கிரசார் போராட்டம்
'கோ பேக் அமித் ஷா' காங்கிரசார் போராட்டம்
ADDED : பிப் 12, 2024 06:44 AM

மைசூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக 'கோ பேக் அமித் ஷா' போஸ்டர் ஒட்டி, காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவுக்கு வரி வினியோகத்தில் மத்திய அரசு அநீதி இழைப்பதாக கூறி, மைசூரு வினோபா சாலையில் உள்ள மஹாராணி அறிவியல் கல்லுாரி வளாகத்தில், நேற்று காங்கிரசார், 'கோ பேக் அமித் ஷா' என, போஸ்டர் ஒட்டி போராட்டம் நடத்தினர்.
அங்கிருந்த போலீசார், மீண்டும் போஸ்டர் ஒட்டுவதை தடுத்து, அவற்றை கிழித்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அரசு கட்டடத்தில் போஸ்டர் ஒட்டினால் வழக்கு பதிவு செய்ய நேரிடும் என எச்சரித்தனர்.
இதனால், போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அப்போது காங்கிரசார், 'நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. அரசு வசூலிக்கும் வரியில், 20 சதவீதம் கூட வழங்கப்படவில்லை. வறட்சியால் மாநில மக்கள் தவித்து வந்தாலும், நிவாரணம் வழங்கப்படவில்லை. மேகதாது, பத்ரா மேலணை உட்பட பல திட்டங்களுக்கு ஒத்துழைக்கவில்லை.
'நாங்கள் தனிப்பட்ட முறையில் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. கர்நாடகாவுக்கு நடக்கும் அநீதிகள் குறித்து குரல் எழுப்பி வருகிறோம்.
'மாநிலத்தின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்காமல், மத்திய அமைச்சர் வெறுங்கையுடன் வந்துள்ளார்' என குற்றம்சாட்டினர்.
சிறிது நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள், சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றினர்.